திருச்சியில் - ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சிறப்பு வட்டாட்சியர் கைது : ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் நடவடிக்கை

திருச்சியில்  -  ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சிறப்பு வட்டாட்சியர் கைது :  ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் நடவடிக்கை
Updated on
1 min read

திருச்சியில் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சிறப்பு வட்டாட்சியரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் நேற்றிரவு கைது செய்தனர்.

திருச்சி கே.கே.நகரைச் சேர்ந்தவர் னிவாசன். இவர் கொட்டப்பட்டு கிராமத்தில் உள்ள தனது மூதாதையருக்கு சொந்தமான 1.11 ஏக்கர் நிலத்துக்கு தடங்கல் (வேறு யாருக்கும் பதிவு செய்ய அனுமதிக் கூடாது) தொடர்பாக, திருச்சி கன்டோன்மென்ட் பாரதிதாசன் சாலையில் உள்ள மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் பொன்மலை பிரிவுக்கான சிறப்பு வட்டாட்சியர் கோகுலிடம் (நகர நிலவரித் திட்டம்) சில நாட்களுக்கு முன் மனு அளித்திருந்தார்.

இதற்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டுமென சிறப்பு வட்டாட்சியர் கோகுல் கூறியுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத னிவாசன் இதுகுறித்து திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸில் புகார் அளித்துள்ளார். அவர்களது அறிவுரையின்பேரில் ரசாயனம் தடவிய ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை வட்டாட்சியர் அலுவலகத்தில் கோகுலிடம் னிவாசன் நேற்றிரவு அளித்துள்ளார்.

அதை கோகுல் பெற்றுக்கொண்டபோது, அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி மணிகண்டன், இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், சேவியர் ராணி, அருள்ஜோதி உள்ளிட்டோர் அடங்கிய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் கோகுலை கையும், களவுமாகப் பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in