ஐடிஐ மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திடும் வகையில் - பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம் : அமைச்சர் சி.வெ.கணேசன் தகவல்

திண்டிவனம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அமைச்சர்கள் சி.வெ.கணேசன், மஸ்தான் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
திண்டிவனம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அமைச்சர்கள் சி.வெ.கணேசன், மஸ்தான் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
Updated on
1 min read

திண்டிவனம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து அமைச்சர் சி.வெ.கணேசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வி தரத்தினை உயர்த்திடவும், அதிக அளவில் வேலைவாய்ப்பினை உருவாக்கி படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்குவதை லட்சியமாக கொண்டு இந்த அரசு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது 90 தொழிற்பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்றுவருகிறார்கள். தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்று வரும் அனைத்து மாணவர்களுக்கும் திட்ட வட்டமாக வேலை வாய்ப்பு கிடைத்திடும் வகையில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு வேலை வாய்ப் பினை உருவாக்கிட பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுவருகிறது.

மேலும் அனைத்து தொழிற் பயிற்சி நிலையங்களிலும் தேவையான கூடுதல் வகுப்பறைகள், உட்கட்டமைப்பு வசதி, அதி நவீன தொழிற்பயிற்சிக்கூடம், அதிநவீன தொழிற்பயிற்சிக்கருவி போன்றவை ஏற்படுத்திடும் வகையில் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் வீரராகவராவ், ஆட்சியர் மோகன்,திண்டிவனம் உதவி ஆட்சியர் எம்.பி.அமித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in