Published : 16 Oct 2021 06:12 AM
Last Updated : 16 Oct 2021 06:12 AM

மாற்றுத்திறனாளிகளுக்கு திமுக அரசு உறுதுணையாக இருக்கும் : அமைச்சர் மஸ்தான் உறுதி

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்ய திமுக அரசு உறுதுணையாக இருக்கும் என அமைச்சர் மஸ்தான் தெரிவித்தார்.

விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்ட பார்வையற்றோர் நலச்சங்கத்தின் சார்பில் சங்க ஆண்டு விழா, ஊன்றுகோல் தின விழா, பொதுக்குழு ஆகிய முப்பெரும் விழா விழுப்புரத்தில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், விழுப்புரம் டி எஸ்பி பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவில்அமைச்சர் மஸ்தான் கலந்துகொண்டு பார்வையற்றோர் 100 பேருக்கு ஊக்கத்தொகை மற்றும் ஊன்றுகோல்களை வழங்கி பேசியதாவது:

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில்தான் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கியவர் கருணாநிதி. அவரின் மறு உருவமாக ஸ்டாலின், தமிழக முதல்வராக பொறுப்பேற்று இந்த 5 மாத காலத்தில் மக்களின் தேவைகளை அறிந்து அதை உடனடியாக நிறைவேற்றி வருகிறார். அரசின் நிதி நிலை நெருக்கடியான சூழலில் இருந்தபோதிலும் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக ரூ.30 கோடியை ஒதுக்கி மாதந்தோறும் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கியுள்ளார்.

மாற்றுத்திறனாளிகளை சந்தித்து அவர்களின் தேவையை கேட்டறிந்து தன்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்பதை ஆண்டவனும் விரும்புகிறான், இந்த நாட்டை ஆள்கிற முதல்வர் ஸ்டாலினும் விரும்புகிறார். மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்ய என்றென்றும் இந்த அரசு உறுதுணையாக இருக்கும். ஒரு மாற்றுத்திறனாளிக்கு செய்கிற உதவி 1,000 ஏழைகளுக்கு செய்கிற உதவியாகும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x