Published : 13 Oct 2021 05:49 AM
Last Updated : 13 Oct 2021 05:49 AM

மக்கள் நல மருந்தகங்களில் முதியவர்களுக்கு இலவச முதலுதவிப் பெட்டி விநியோகம் :

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள மக்கள் நல மருந்தகங்களில் 1,500 முதியவர்களுக்கு இலவசமாக முதலுதவிப் பெட்டிகள் விநியோகம் செய்யப்பட்டன.

மக்களுக்கு குறைவான விலையில் மருந்துகள் கிடைக்க வேண்டும் என்பதை நோக்கமாகக்கொண்டு, நாடு முழுவதும் ‘மக்கள் நல மருந்தகங்கள்’ எனும் மலிவு விலை மருந்தகங்களை மத்திய அரசு திறந்து வருகிறது. இந்த மருந்தகங்களில் கிடைக்கும் 800-க்கும் மேற்பட்ட மருந்துகள் பிரபல நிறுவனங்களின் விலையைவிட 50 முதல் 90 சதவீதம் வரை குறைவாக இருக்கின்றன. தமிழகம் முழுவதும் 400-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய், வயிறுகோளாறுகள், காசநோய், இருதய நோய் உள்ளிட்ட நோய்களுக்கான மருந்துகள் மக்கள் நல மருந்தகங்களில் கிடைக்கின்றன.

இந்நிலையில், சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு, கோவையில் உள்ள 20 மக்கள் நல மருந்தகங்களில் தலா 75 பேர் வீதம் மொத்தம் 1,500 முதியவர்களுக்கு முதலுதவிப் பெட்டிகள் இலவசமாக வழங்கப்பட்டன. இந்த முதலுதவிப் பெட்டியில், மல்டி விட்டமின் சத்து மாத்திரைகள், சளி மாத்திரை, எலும்புகள் வலுவாக இருக்க உதவும் கால்சியம் மாத்திரைகள், புரோட்டீன் சாக்லேட், முகக்கவசம் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன. இதுதவிர, மக்கள் நல மருந்தகங்களில் முதலுதவிப் பெட்டியை பெற்றுக்கொண்ட முதியவர்களுக்கு இலவசமாக சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் பரிசோதனை செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x