Published : 12 Oct 2021 03:13 AM
Last Updated : 12 Oct 2021 03:13 AM
கோவை: கோவை சோமனூரை அடுத்த திம்மினியாம்பாளையத்தைச் சேர்ந்தவர் பி.ராமசாமி. இவரது வீட்டில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக மின் கணக்கீடு செய்யப்படவில்லை. இதுதொடர்பாக, தொடர்புடைய மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று கேட்டபோது, எந்த தொகையும் செலுத்த வேண்டியதில்லை என்று தெரிவித்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக இதே பதிலை மின் கணக்கீட்டாளர் மற்றும் வருவாய் ஆய்வாளர் தெரிவித்து வந்துள்ளனர். அதைத்தொடர்ந்து, புதிதாக வந்த கணக்கீட்டாளர், மின் கணக்கீடு செய்து ரூ.20 ஆயிரத்துக்கும் மேல் மின் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு மூலம், கோவை மண்டல மின்வாரிய தலைமை பொறியாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதைத்தொடர்ந்து, தலைமை பொறியாளர் டேவிட் ஜெபசிங் உத்தரவின்பேரில் ராமசாமியின் வீட்டு மின்அளவி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக, ராமசாமிக்கு சோமனூர் மின்வாரிய செயற்பொறியாளர் அனுப்பியுள்ள கடிதத்தில், “கடந்த செப்டம்பர் மாத கணக்கீட்டின்படி ரூ.581 மின்கட்டணமாக செலுத்த வேண்டும். 2019 டிசம்பர் மாதம் முதல் 2021 ஆகஸ்ட் மாதம் வரை கணக்கீட்டாளரால் தவறாக கணக்கிடப்பட்ட காரணத்தால், அதன்பிறகு பெறப்பட்ட மின்அளவி ஆய்வக அறிக்கையின்படி ரூ.6,918-ஐ மின் கட்டணமாக செலுத்த வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மூன்று ஆண்டுகளாக மின்கணக்கீடு செய்யாத கணக்கீட்டாளர் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT