Published : 12 Oct 2021 03:13 AM
Last Updated : 12 Oct 2021 03:13 AM

ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு கூடுதல் தண்ணீர் வழங்க கோரிக்கை :

ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு 90 நாட்களுக்கு 2880 மில்லியன் கன அடி தண்ணீர் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் நலச்சங்கத்தினர் பொதுப்பணித்துறை தலைமைப்பொறியாளர் அசோகனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன திட்டத்தில் 44,380 ஏக்கர் பாசன நிலங்கள், ‘ஏ’ மண்டலம் மற்றும் ‘பி’ மண்டலம் என பிரிக்கப்பட்டு, ஒரு மண்டலத்தில் 22,000 ஏக்கர் வீதம், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பாசனத்துக்கு நீர் வழங்கப்படுகிறது. ஒரு சுற்றுக்கு, 15 நாட்கள் வீதம் ஆறு சுற்றுக்கு 90 நாட்கள் நீர் வழங்குவது நடைமுறையில் உள்ளது. ஆனால் சமீப காலமாக படிப்படியாக நாட்கள் குறைக்கப்பட்டு 60 முதல் 80 நாட்களுக்கு மேல் பாசனத்துக்கு நீர் வழங்கப்படுவதில்லை.

நடப்பாண்டு, பிஏபி தொகுப்பு அணைகளில் முழு கொள்ளளவுக்கு நீர் இருப்பு உள்ளதால் 2880 மில்லியன் கனஅடி நீர் வழங்க கோரி விவசாயிகள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. அதிகாரிகளுடன் நடந்த பேச்சு வார்த்தையில் 2709 மில்லியன் கனஅடி நீர் வழங்குவதாக முடிவெடுக்கப்பட்டது. ஆனால், தற்போது 80 நாட்களுக்கு 2580 மில்லியன் கனஅடி நீர் மட்டுமே வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். விவசாயிகளின் கோரிக்கையை பரிசீலித்து, விரைவில் கூடுதல் நீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x