Published : 12 Oct 2021 03:13 AM
Last Updated : 12 Oct 2021 03:13 AM
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் வாராந்திர மக்கள் குறைதீர் முகாம் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், ‘‘கோவை விமானநிலைய விரிவாக்கப் பணிகளுக்காக கையகப்படுத்தப்பட்ட இடத்துக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு சதுர அடிக்கு ரூ.1,500 என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது அதே நிலம் சதுர அடி ரூ.4,500-க்கு விற்பனை ஆகிறது. அரசு நிர்ணயித்துள்ள தொகையில் புதிதாக வீடு மற்றும் நிலம் வாங்குவது சிரமம். எனவே, அந்த இடத்துக்கு தற்போது உள்ள சந்தை விலையின் அடிப்படையில் இழப்பீட்டு தொகை மற்றும் மாற்று இடம் வழங்க வேண்டும்’’ எனக் கூறியுள்ளனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில்,‘‘ சூலூர் மோப்பிரிபாளையம் மற்றும் மதுக்கரை, திருமலையம்பாளையம் பகுதியில் உள்ள சில நிறுவனங்கள் தேங்காய் தொட்டிகளை எரிக்கின்றனர். இதனால் நிலத்தடி நீர்மட்டம் மற்றும் காற்று மாசு ஏற்படுகிறது. விவசாய பணிகள் மேற்கொள்ள முடியவில்லை. கால்நடைகளும் பாதிப்படைகின்றன. இந்த நிறுவனங்களை விவசாயம் இல்லாத பகுதிகளுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்’’ எனக் கூறப்பட்டுள்ளது.
பாரதிய கிசான் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில்,‘‘சூலூர் அப்பநாயக்கன்பட்டி, கலங்கல், காங்கயம்பாளையம், காடம்பாடி உள்ளிட்ட வருவாய் கிராமங்களில் சூலூர் விமானப்படைத் தளத்துக்காக சுமார் 400 ஏக்கர் கையகப்படுத்தப்பட உள்ளது. இதனால் அந்த இடம் உள்ள சுற்று வட்டார பகுதியில் எந்த வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ள முடியவில்லை. எனவே, கையகப்படுத்தப்படும் நிலத்தை சரியாக அடையாளப்படுத்த வேண்டும். இதன் மூலம் அருகில் உள்ள மற்ற நிலங்களில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்’’ எனக் கூறப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 581 மனுக்கள் பெறப்பட்டன. மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT