Published : 12 Oct 2021 03:13 AM
Last Updated : 12 Oct 2021 03:13 AM
காந்தியின் வாழ்க்கை சரித்திரத்தை இளைஞர்களிடம் எடுத்துக் கூறுங்கள் என ரோட்டரி சார்பில் நடந்த விழாவில், முன்னாள் மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் வலியுறுத்தினார்.
‘யூத் கான்கிளேவ்’ என்ற இளைஞர்களுக்கான சிறப்பு மாநாடு, ‘ஃபீஸ் - யுனிவர்சல் சிக்னேச்சர்’ என்ற தலைப்பில் ‘ஜூம்’ செயலி வழியாக நேற்று முன்தினம் நடந்தது. ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்ட ஆளுநர் ராஜசேகர் னிவாசன் இந்த மாநாட்டை தொடங்கிவைத்தார்.
இதில், முன்னாள் மத்திய அமைச்சரும், காந்தி குளோபல் ஃபேமிலி இயக்கத்தின் தேசிய தலைவருமான குலாம் நபி ஆசாத் பேசும்போது, ‘‘நமது இளைஞர்கள், மாணவர்களிடம் காந்திய கொள்கைகளையும், அவரது வாழ்க்கைச் சரித்திரத்தையும் எடுத்துச் சொல்லுங்கள். காந்தியடிகளின் வாழ்க்கை பாடத்தை முழுமையாக கற்பியுங்கள். இளைஞர்கள், மாணவர்களின் வாழ்க்கை செழுமையடைய இவற்றை கற்பிப்பது அவசியம்’’ என்றார்.
மாநாட்டில் மாவட்ட ரோட்ரேக்ட் கமிட்டி தலைவர் சி.ஜி.குமார், பிரதிநிதி கீர்த்தி விவேக், மான்செஸ்டர் சர்வதேசப் பள்ளியின் பொறுப்பாளர் ராஜேஷ் வாசுதேவன், ரோட்டரி மாவட்டம் 3201 மாவட்ட தலைவர் மனோஜ் முத்துபாலா உள்ளிட்டோர் பேசினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காந்தி குளோபல் ஃபேமிலியின் தமிழக தலைவர் பி.எஸ்.மூர்த்தி, ரோட்டரி மாவட்டம் 3201-ன் மண்டல தலைவர் ஆர்.ஹென்றி அமலராஜ், ரோட்டரேக்ட் கிளப் ஆப் குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி கிளப் தலைவர் மோனிஸ், இன்ட்ராக்ட் கிளப் ஆப் மான்செஸ்டர் சர்வதேசப் பள்ளியின் தலைவர் ரதீக் ஆதித்யா மூர்த்தி, இன்ட்ராக்ட் கிளப் ஆப் நேஷனல் மாடல் பள்ளி தலைவர் சாருநேத்ரா ஆகியோர் செய்திருந்தனர்.
இந்த மாநாட்டில் கோவை, கொச்சி, மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 13 பள்ளிகள், 7 கல்லூரிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT