Published : 12 Oct 2021 03:14 AM
Last Updated : 12 Oct 2021 03:14 AM
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக வீரகனூரில் 70 மிமீ மழை பதிவானது.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலையில் தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது. சேலம் அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி, ஜங்ஷன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குளிர்ந்த காற்றும், கனமழையும் பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையின்போது, கால்வாய்கள் நிறைந்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
ஏற்காட்டில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில், பகலில் சாலைகளில் பனிபடர்ந்து இருப்பதால், வாகனங்களில் செல்வோர் வாகனத்தின் முகப்பு விளக்கை எரியவிட்டுச் சென்றனர். தொடர் மழையால் ஏற்காட்டில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) விவரம்: வீரகனூர் 70, கெங்கவல்லி 60, பெத்தநாயக்கன்பாளையம் 58, ஏற்காடு 36, காடையாம்பட்டி 42.2, மேட்டூர் 28.2, ஆணைமடுவு 38 ஆத்தூர் 27, தம்மம்பட்டி 17.3, சேலம் 44.4, ஓமலூர் 18, எடப்பாடி 9.6 மிமீ மழை பதிவானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT