Published : 07 Oct 2021 03:13 AM
Last Updated : 07 Oct 2021 03:13 AM

`சையது முஷ்டாக் அலி டி 20’ கோப்பை கிரிக்கெட் போட்டி - தமிழக அணியில் சேலம் வீரர்கள் இருவருக்கு வாய்ப்பு :

`சையது முஷ்டாக் அலி டி20' கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தமிழக அணியில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்கள் டி.நடராஜன், ஆர்.விவேக் ராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த டி.நடராஜன், இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்று சர்வதேச போட்டிகளில் விளையாடி யார்க்கர் கிங் என்ற பெயர் பெற்றுள்ளார். இந்நிலையில், சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த ஆர்.விவேக் ராஜ்( 29) தமிழக கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

`சையத் முஷ்டாக் அலி டி20' கோப்பை கிரிக்கெட் போட்டி நவம்பர் 22-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், இந்த தொடருக்கான தமிழக அணியில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த டி.நடராஜனுடன், மேட்டூரைச் சேர்ந்த ஆர்.விவேக் இடம் பெற்றுள்ளார். டிஎன்பிஎல் போட்டிகளில் திண்டுக்கல் அணிக்காக விளையாடி வரும் ஆர்.விவேக் ராஜ், பேட்டிங், பந்துவீச்சு என ஆல்- ரவுண்டராக சிறப்பாக விளையாடி உள்ளார்.

டிஎன்பிஎல் போட்டிகளில் திண்டுக்கல் அணிக்காக கடந்த 5 சீசன்களில் விளையாடி 850 ரன்களை குவித்துள்ளார். மேலும், அதிகபட்ச சிக்ஸர்கள் அதாவது 64 சிக்ஸர்களை அடித்து சாதனை படைத்த ஒரே வீரர் என்ற சாதனையையும் ஆர்.விவேக் ராஜ் நிகழ்த்தியுள்ளார்.

சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில், சாதனைகளை நிகழ்த்தும் பட்சத்தில், ஆர். விவேக் ராஜ் இந்திய அணிக்கு தேர்வாகும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. இதன் மூலம் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இரு வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெறக்கூடிய வாய்ப்பும் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x