Published : 07 Oct 2021 03:15 AM
Last Updated : 07 Oct 2021 03:15 AM
தருமபுரி மாவட்டம் சிட்லிங் அருகே விட்டுச் செல்லப்பட்ட பச்சிளங் குழந்தை மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
அரூர் வட்டம் சிட்லிங் கிராமத்தில் ஒரு ஓட்டல் அருகே, பிறந்த 2 வாரங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று நேற்று அழுதபடி இருந்துள்ளது. பெற்றோர் யாருமின்றி தனியாக குழந்தை மட்டும் இருப்பதைக் கண்ட ஓட்டல் உரிமையாளர் குழந்தையை அப்பகுதியில் இயங்கும் ஒரு தனியார் மருத்துவமனையின் பாதுகாப்பில் ஒப்படைத்துள்ளார். பின்னர் இதுபற்றி தகவல் அறிந்த சமூகப் பாதுகாப்புத் துறையின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரிகள் அங்கு சென்றனர். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவகாந்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர் சரவணா ஆகியோர் தலைமையிலான குழுவினர் அந்தக் குழந்தையை மீட்டனர்.
மீட்கப்பட்ட அந்த குழந்தைக்கு கயல்விழி என மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி பெயர் சூட்டினார். பின்னர் குழந்தையை நிர்மலா தத்து வள மையம் என்ற காப்பக பொறுப்பாளர் சுப்ரியாவிடம் ஆட்சியர் ஒப்படைத்தார். குழந்தையை உரிமை கோருபவர்கள் அக்டோபர்6-ம் தேதியில் இருந்து 60 நாட்களுக்குள் தருமபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் அல்லது குழந்தைகள் நலக் குழுமத்தை அணுகலாம் என ஆட்சியர் அலுவலகம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT