அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.70 லட்சம் மோசடி : பள்ளி ஆசிரியரிடம் போலீஸார் விசாரணை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.70 லட்சம் மோசடி :  பள்ளி ஆசிரியரிடம் போலீஸார் விசாரணை
Updated on
1 min read

அரசு வேலை வங்கித் தருவதாக ரூ 70 லட்சம் மோசடி செய்த வழக்கு தொடர்பாக, அரசுப் பள்ளி ஆசிரியரிடம் ஈரோடு குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த கள்ளிப்பட்டி அரசு ஊராட்சிஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர் ராஜசேகர். இவர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, பலரிடம் பணம் பெற்று போலி அரசாணை வழங்கியதாக ஈரோடு எஸ்.பி.அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த 20-ம் தேதி புகார் அளித்தனர். இந்த மனுவை பெற்றுக்கொண்ட எஸ்பி சசிமோகன்,மனு மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில், ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார், பணம் கொடுத்து ஏமாந்தவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அரசு வேலை வாங்கித் தருவதாக 13 பேரிடம் ஆசை வார்த்தை கூறி ரூ.70 லட்சம் வரை மோசடி நடந்தது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கூறியதாவது:

அரசு வேலை வாங்கித் தருவதாக 13 பேர் இடம் ரூ. 70 லட்சம் பெறப்பட்டுள்ளது. இதில் ஆசிரியர் ராஜசேகர் இடைத்தரகராக செயல்பட்டு உள்ளார். இதில் மேலும், சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. போலி ஆணை வழங்கி மோசடிக்குமூளையாக செயல்பட்ட நபர்குறித்து தகவல் கிடைத்துள்ளது. விரைவில் அந்த நபர் கைது செய்யப்படுவார் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in