Published : 26 Sep 2021 03:25 AM
Last Updated : 26 Sep 2021 03:25 AM
சேலம் மாநகராட்சிப் பகுதியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ், சேலம் எம்பி பார்த்திபன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் எம்எல்ஏக்கள் சேலம் வடக்கு ராஜேந்திரன், சேலம் தெற்கு பாலசுப்ரமணியம், சேலம் மேற்கு அருள் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை கூறினர்.
கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் பேசியதாவது:
சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் 81 பணிகள் எடுக்கப்பட்டு இதுவரை 45 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 36 பணிகள் செயல்பாட்டில் உள்ளன. புதிய பேருந்து நிலையம் அருகில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம், தம்மண்ணன் சாலை மற்றும் சத்திரம் சாலை, ஆனந்தாபாலம் அருகில் அடுக்குமாடி வாகனம் நிறுத்துமிடம், பெரியார் பேரங்காடி அபிவிருத்தி பணிகள், பள்ளப்பட்டி ஏரி அபிவிருத்தி செய்து அழகு படுத்தும் பணி, மார்க்கெட் மேம்பாடு, எருமாபாளையம் பசுமைவெளி பூங்கா பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், நிலுவையில் உள்ள பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்ற வருகிறது.
இப்பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். சீர்மிகு திட்டபணிகளை விரைந்து முடித்து மாநகராட்சிப் பகுதி அழகுற திகழ உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், கரோனா காலத்தில் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி கரோனா தொற்றினை குறைக்க நடவடிக்கை மேற்கொண்ட அனைத்து நிலை அலுவலர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் மாநகர பொறியாளர் அசோகன், மாநகர நல அலுவலர் யோகானந்த் மற்றும் செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT