Published : 26 Sep 2021 03:27 AM
Last Updated : 26 Sep 2021 03:27 AM

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் - 1.76 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு :

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இன்று நடைபெற உள்ள 1,876 சிறப்பு முகாம்களில் 1.76 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித் துள்ளனர்.

தமிழகத்தில் மூன்றாம் அலை கரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணி விரைவுபடுத்த சுகாதாரத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்காக, மாபெரும் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே இரண்டு சிறப்பு முகாம் நடைபெற்ற நிலையில் மூன்றாம் கட்ட கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெறவுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் இதுவரை சுமார் 8 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இதில், முதல் தவணையை 6.11 லட்சம் பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசியை 1.93 லட்சம் பேரும் செலுத்திக் கொண்டுள்ளனர். மாவட்டத்தில் இன்று 804 சிறப்பு முகாம்கள் மூலம் சுமார் 66 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இதுவரை 5.65 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இதில், 4.69 லட்சம் பேர் முதல் தவணையும், சுமார் 97 ஆயிரம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். மாவட்டத்தில் இன்று 546 சிறப்பு முகாம்களில் 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்துள்ளனர்.

அதேபோல், திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 5.65 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இதில், 4.47 லட்சம் பேர் முதல் தவணையும், 1.17 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். மாவட்டத்தில் இன்று 526 சிறப்பு முகாம்களில் 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்துள்ளனர்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இன்று 1,876 சிறப்பு முகாம்களில் 1.76 லட்சம் பேருக்கு ஒரே நாளில் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x