Published : 26 Sep 2021 03:27 AM
Last Updated : 26 Sep 2021 03:27 AM

உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் பேச்சாளர்களை நியமித்தது ம.நீ.ம. :

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கான பேச்சாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு வருகிற அக்டோபர் 6 மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட தயாராகி வருகின்றனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் 9 மாவட்டங்களுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில், அக்கட்சியின் சார்பில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ள பேச்சாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக, கட்சியின் துணை தலைவர் மவுரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், விரைவாக மட்டுமல்லாமல் வீரியத்தோடும் செயலாற்றி வருவது மகிழ்ச்சியளிக்கிறது.

பிரச்சார களங்களில் மக்கள் மத்தியில் பரப்புரையாற்றிட தலைமை நிலைய பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான ஒருங்கிணைப்பாளராக மாநில செயலாளர் காந்தி கண்ணதாசன் உள்ளார். கே.எஸ்.முரளி கிருஷ்ணா, ஜெயக்கண்ணா உள்ளிட்ட 37 தலைமை நிலைய பேச்சாளர்கள் பிரச்சாரங்களில் ஈடுபட நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் இணைந்து வேட்பாளர்கள் பணியாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x