Published : 25 Sep 2021 03:34 AM
Last Updated : 25 Sep 2021 03:34 AM

சேலத்தில் பெய்த கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது : ஏற்காடு 13-வது கொண்டை ஊசி வளைவில் மண் சரிவு

சேலத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஏற்காடு மலைப்பாதையில் 13-வது கொண்டை ஊசி வளைவில் மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு குளிர்ந்த காற்று வீசியதுடன், இடி, மின்னலுடன் கனமழை பெய்ய ஆரம்பித்தது. நேற்று அதிகாலை 5 மணி வரை மழை பெய்தது.

சேலம் மாநகர பகுதியில் பெய்த கனமழையால் தாதுபாய் குட்டை ரோடு, நாராயணன் நகர், கிச்சிப்பாளையம், ஆறுமுக நகர், பச்சப்பட்டி, சித்தேஸ்வரா, சேர்மேன் ராமலிங்கம் ரோடு, களரம்பட்டி, கருங்கல்பட்டி, நான்கு ரோடு, லீ - பஜார், ஐந்து ரோடு உள்ளிட்ட மாநகரத்தின் தாழ்வான பகுதிகளில் சாக்கடை கால்வாய் நிரம்பி, சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

கழிவு நீர் சாலைகளிலும், தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளுக்குள்ளும் புகுந்ததால், சுகாதார சீர் கேடு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்துக்காகவும், குடிநீர் குழாய் பதிப்பு பணிக்காகவும் சாலைகள் குழி தோண்டப்பட்டு, மண் சாலைகளால் காட்சி அளித்து வருகிறது. நேற்று முன் தினம் பெய்த மழையால் மண் சாலைகள் சேரும் சகதியுமாக மாறியது.

கழிவு சூழ்ந்த சாலையில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத வேதனைக்கு உள்ளாகினர்.

ஏற்காடு பகுதியில் பெய்த மழை காரணமாக, 13-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. பாறாங்கற்கள் உருண்டு வந்து சாலையை அடைத்து நின்றன. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொக்லைன் வாகனம் மூலம் கற்கள் அகற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.

மழையால் ஏற்காடு மலைப்பாதையில் வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ரோந்து சென்று கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பட விளக்கம்

சேலத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையால் மூக்கனேரி ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறியது. அடுத்த படம்: சேலத்தில் பெய்த கனமழையால் அழகாபுரம் மாரிமுத்து கவுண்டர் தெரு குடியிருப்புப் பகுதியில் குளம் போல் தேங்கிய மழை நீர்.

ஏற்காட்டில் பெய்த மழையால் 13-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. இதையடுத்து சாலையில் உருண்டு விழுந்த பாறைகளை உடைத்து அகற்றும் பணி விறுவிறுப்பாக நடந்தது. படங்கள்: எஸ்.குரு பிரசாத்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x