Published : 21 Sep 2021 03:20 AM
Last Updated : 21 Sep 2021 03:20 AM
மத்திய அரசைக் கண்டித்து, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர்சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் நேற்று கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மத்திய பாஜக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடந்தது. புதிய வேளாண் சட்டங்களைக் கண்டித்தும், பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
சேலத்தில் மத்திய மாவட்ட திமுக சார்பில் திமுக அலுவலகம் அருகே மாவட்ட தலைவர் எம்எல்ஏ ராஜேந்திரன் தலைமையில் திமுக-வினர் கருப்புக்கொடி ஏந்தி, மத்திய அரசைக் கண்டித்தும், புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், மாவட்ட அவைத்தலைவர் கலையமுதன், பொருளாளர் சுபாஷ், எம்பி பார்த்திபன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் பாஸ்கரன், மதிமுக நிர்வாகி ஆனந்தராஜ், மார்க்சிஸ்ட் ராமமூர்த்தி, விசிக ஜெயச் சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்வகணபதி, சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவலிங்கம், திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் வீரபாண்டி ராஜா ஆகியோரது தலைமையில் அவரவர் வீட்டின் முன்பாக திமுக-வினர் கருப்புக் கொடி ஏந்தி, மத்திய அரசைக் கண்டித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் திமுக-வினர் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
நாமக்கல்
மத்திய அரசைக் கண்டித்து நாமக்கல், திருச்செங்கோட்டில் திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் அவரவர் இல்லம் மற்றும் கட்சி அலுலகம் எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திமுக மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் தலைமை வகித்தார். நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில், வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வதை கண்டித்தும், பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை வாபஸ் பெறக்கோரியும் கோஷம் எழுப்பப்பட்டது.
கொமதேக மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், விசிக மணிமாறன், மதிமுக பழனிசாமி, திமுக நிர்வாகிகள் மணிமாறன், ராணா ஆனந்த், சிவகுமார், பூபதி, சரவணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
திருச்செங்கோட்டில் . . .
நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருச்செங்கோட்டில் கட்சியின் மாவட்ட தலைவர் சர்வேயர் செல்வகுமார் தலைமையில் போராட்டம் நடந்தது. மாவட்ட பொருளாளர் டி.எஸ்.டி. பொன்னுசாமி, நகர தலைவர் எஸ்.எஸ்.கே. செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு
கொடுமுடி, ஒத்தக்கடையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்ட திமுகவினர் பங்கேற்றனர். ஈரோடு காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு, மாநகர் மாவட்டத் தலைவர் ஈ.பி.ரவி தலைமையிலும், தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் மக்கள் ராஜன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT