Published : 01 Sep 2021 03:19 AM
Last Updated : 01 Sep 2021 03:19 AM

எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து அதிமுகவினர் சாலை மறியல் :

டாக்டர். ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை, அண்ணா மலை பல்கலைக் கழகத்தோடு இணைக்கும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டதை கண் டித்து, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் நேற்று வெளிநடப்பு செய்து சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மறியலில் ஈடுபட்ட அதிமுக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக சட்டப் பேரவை உறுப்பினர்களை காவல்துறை யினர் கைது செய்தனர்.

இதைக்கண்டித்து, மாநிலம் முழுவதும் அதிமுகவினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர்

வேலூர் அண்ணா சாலையில் மாநகராட்சி மூன்றாவது மண்டல அலுவலகம் எதிரே அதிமுகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநகர மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டப் பொருளாளர் மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்று திமுகவுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பேருந்து நிலை யத்தில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கோ.வி. சம்பத்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் வாணியம்பாடி - ஆம்பூர் பிரதான சாலையில் அமர்ந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால், அங்கு போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு வந்த வாணியம்பாடி நகர காவல் துறையினர் மறியலில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகிகளை கைது செய்து அருகேயுள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். பிறகு, ஒரு மணி நேரம் கழித்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

திருவண்ணாமலை

தி.மலை, ஆரணி, செய்யாறு, தண்டராம்பட்டு, சேத்துப்பட்டு உட்பட மாவட் டத்தில் 13 இடங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், திருவண்ணாமலை, செய்யாறு மற்றும் போளூர் ஆகிய 3 இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது. தமிழக அரசுக்கு எதிராக முழக்கமிட்ட அதிமுகவினர், பின்னர் கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x