Published : 28 Aug 2021 03:14 AM
Last Updated : 28 Aug 2021 03:14 AM

பல ஆயிரம் ஏக்கர் பயிர்களை அழிக்கும் காட்டு பன்றிகள் : குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வேதனை

சிவகங்கை மாவட்டம், திருப்பு வனத்தில் காட்டுப் பன்றிகளால் பல ஆயிரம் ஏக்கரில் விவசாயம் அழிந்து வருவதாக குறைதீர்க் கூட்டத்தில் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் இணைய வழியாக நடந்தது. மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தார். மாவட்டத்தில் உள்ள 12 வட்டார வேளாண்மை அலுவலகங்களில் விவசாயிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: திருப்புவனம் அருகே வயல்சேரி, நெல்முடிக்கரை, தட்டான்குளம், கழுகேர்கடை, கீழடி, கொந்தகை, குருந்தங்குளம், மாரநாடு, ஓடாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் நெல், கரும்பு, நிலக்கடலை, வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

அப்பகுதியில் 500-க்கும் மேற்பட்ட காட்டுப் பன்றிகள் இரவு நேரங்களில் பயிர்களை சேதப்படுத்திச் செல்கின்றன. பன்றிகளை பிடிக்க வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயப் பணிகளு க்காக வைகை தண்ணீரைத் திறக்க வேண்டும். இளையான்குடியில் விதை நெல் தட்டுப்பாடு உள்ளது. லெசிஸ் பெரியாறு கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும். கடந்த ஆண்டுக்கான பயிர் காப்பீடு இழப்பீடு வழங்க வேண்டும், என்றனர்.

ஆட்சியர் பேசியதாவது: காட்டுப் பன்றிகளை தடுக்க விளைநிலங்களில் சோலார் வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விதை நெல்லை தட்டுப்பாடின்றி வழங்க வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்தில் தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பயிர் காப்பீடு இழப்பீடு செப்டம்பருக்குள் வழங்கப்படும். லெசிஸ் கால்வாயில் செப்.1-ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x