Published : 24 Aug 2021 03:16 AM
Last Updated : 24 Aug 2021 03:16 AM

தமிழக அரசு அனுமதி அளித்த போதிலும் - திரையரங்குகள் திறக்கப்படவில்லை :

தமிழகத்தில் கரோனாவை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு மார்ச் 24-ம்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு பல்வேறுதளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், 250 நாட்களுக்கு பிறகு கடந்த ஆண்டு நவம்பரில் திரையரங்குகள் திறக்கப்பட்டு, 50 சதவீதபார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், கரோனா 2-வது அலை உருவானதால் கடந்த ஏப்ரல் 24 ம் தேதி முதல் திரையரங்குகள் மீண்டும் மூடப்பட்டன. தற்போது பல்வேறுதளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து 4 மாதங்களுக்கு பிறகு ஆகஸ்ட் 23-ம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.

இதையடுத்து உரிமையாளர்கள் திரையரங்குகளை சுத்தம் செய்து தயார் நிலையில் வைத்தனர். ஆனால், தூத்துக்குடி மாவட்டத்தில் திரையரங்குகள் நேற்று திறக்கப்படவில்லை.புதிய திரைப்படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், திரையிடுவதற்கு ஏற்ற திரைப்படங்களை தயார் செய்யாததால் நேற்று திரையரங்குகளை திறக்க முடியவில்லை.

சில திரையரங்குகள் நாளை (புதன்கிழமை)முதல் திறக்கப்படுவதாகவும், பெரும்பாலான திரையரங்குகள் வரும் வெள்ளிக்கிழமை முதல் திறக்கப்படவுள்ளதாகவும் உரிமை யாளர்கள் தெரிவித்தனர். தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் நேற்று திரையரங்குகள் திறக்கப்பட்டன. ஆனால், எந்த திரையரங்கிலும் திரைப்படம் திரையிடப்படவில்லை. சுமார் 4 மாத காலமாக மூடப்பட்டு கிடந்ததால் திரையரங்குகளை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பல திரையரங்குகளில் வருகிற வெள்ளிக்கிழமை முதல் திரைப்படங்களை திரையிட முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அறிவியல் மையம்

கரோனா தொற்று பரவல் காரணமாக திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் கடந்த ஏப்ரல் 16-ம் தேதி முதல் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. நேற்று அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மீண்டும் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மாவட்ட அறிவியல் அலுவலர் எஸ்.எம்.குமார் முதல் பார்வையாளரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x