பரமத்தி அருகே - பணத்திற்காக சாலையில் வைத்து தாயைத் தாக்கிய மகன் கைது : சமூக ஊடகங்களில் பரவியதால் போலீஸ் விசாரணை

பரமத்தி அருகே  -  பணத்திற்காக சாலையில் வைத்து தாயைத் தாக்கிய மகன் கைது :  சமூக ஊடகங்களில் பரவியதால் போலீஸ் விசாரணை
Updated on
1 min read

பணத்திற்காக பெற்ற தாயை அவரது மகனே சாலையில் வைத்துஅடித்து உதைத்த சம்பவம் தொடர்பாக பரமத்தி காவல் நிலையத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி பொன்னேரிப்பட்டியைச் சேர்ந்தவர் நல்லம்மாள் (65). இவரது கணவர் சின்னசாமி (74). மகன், மகளுக்கு திருமணமாகி தனியாக வசிக்கின்றனர். கடந்த ஆண்டு உடல் நிலை சரியில்லாமல் சின்னசாமி உயிரிழந்தார். நல்லம்மாள் தனியாக வீட்டில் இருந்து கொண்டு தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டத்தின் கீழ் கூலி வேலைக்குச் சென்று வந்துள்ளார்.

மேலும், நகைகளை விற்றப்பணம் ரூ.3 லட்சம் ரொக்கப்பணத்தை வங்கியில் டெபாசிட் செய்வதற்காக வீட்டில் வைத்துள்ளார். இதையறிந்த அவரது மகன் சண்முகம், தாயிடம் பணத்தைக் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை நல்லம்மாளை சந்தித்த சண்முகம் (47), அவரது மனைவி ஜானகி ஆகியோர் வீடு மற்றும் ரொக்கப் பணம் ரூ.3 லட்சத்தையும் கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.

அப்போது, நல்லம்மாளின் தலைமுடியை பிடித்து இழுத்து அடித்து உதைத்துள்ளனர். இதில் படுகாயமடைந்த நல்லம்மாளை அங்குள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

பணத்திற்காக பெற்ற தாயை சாலையில் வைத்து அடித்து உதைத்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பரமத்தி காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து சண்முகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in