Published : 15 Aug 2021 03:27 AM
Last Updated : 15 Aug 2021 03:27 AM

சுதந்திர தின விழாவையொட்டி ரயில் நிலையங்களில் - துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் பாதுகாப்பு : வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சோதனை

காட்பாடி ரயில் நிலைய தண்டவாள பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரயில்வே காவல் துறையினர். அடுத்த படம்: வேலூர் கோட்டை கொத்தளத்தில் மோப்ப நாய் லூசி உதவியுடன் நேற்று வெடிகுண்டு சோதனை நடத்திய காவல் துறையினர்.

வேலூர்

சுதந்திர தினத்தையொட்டி அரக்கோணம், காட்பாடி, ஜோலார் பேட்டை ரயில் நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினரின் பாதுகாப்பு அதிகரித் துள்ளதுடன், ரயில்வே தண்டவாளங்களையும் நாளை காலை வரை கண்காணிக்க உள்ளனர்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் சுதந்திர தின பாதுகாப்புப் பணியில் சுமார் 2 ஆயிரம் காவலர்கள் ஈடுபட்டுள் ளனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல் துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடு வதுடன் இரு சக்கர, நான்கு சக்கர வாகன ரோந்துப் பணியில் ஈடுபடவுள்ளனர். அத்துடன் கோயில், வழிபாட்டுத் தலங் களின் பாதுகாப்புப் பணியை கண் காணிக்க உள்ளனர்.

மேலும், முக்கிய ரயில் நிலையங்களான அரக்கோணம், காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை ரயில் நிலையங்களின் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் காவல் துறையினருடன் ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் ரயில்வே காவல் துறையினர் இணைந்து நாளை (ஆக-16) காலை வரை பாதுகாப்புப் பணியை மேற்கொள்ளவுள்ளனர்.

ரயில் நிலையத்துக்கு பயணிகள் எடுத்து வரும் பொருட்களை முழுமையாக சோதனை செய்த பிறகே அனுமதித்தனர். மேலும், ரயில் நிலையத்துக்கு வெளியே வாகன நிறுத்தும் இடங்களையும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவி யுடன் சோதனை நடத்தினர். ரயில் நிலையத்துக்குள் ‘டோர் பிரேம் மெட்டல் டிடெக்டர்’ மற்றும் ‘கையடக்க மெட்டல் டிடெக்டர்’ உதவியுடன் தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளதா? என்றும் சோதனை செய்தனர்.

அதேபோல், ரயில் நிலைய தண்டவாளங்களையும் முழுமை யாக கண்காணிக்கவுள்ளனர். இதற்காக, ரயில்வே பாதுகாப்புப் படையினர், ரயில்வே காவல் துறையினர் துப்பாக்கி ஏந்திய கண்காணிப்புப் பணியில் ஈடுபடு வதுடன், ரயில்வே தண்டவாள பராமரிப்பாளர்களும் தொடர் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர். அத்துடன், கிராம உதவியாளர்கள் அருகில் உள்ள தண்டவாளப் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடவும் நடவடிக்கை எடுத்துள்ளனர். சுமார் 48 மணி நேரம் கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கோட்டையில் கண்காணிப்பு

வேலூர் கோட்டையில் உள்ள கொத்தளத்தில் மாவட்ட ஆட்சியர் கொடியேற்றி மரியாதை செலுத்த உள்ளதால் அங்கு பாதுகாப்புப் பணியை காவல் துறையினர் அதிகரித்துள்ளனர். இதற்காக, வேலூர் மாவட்ட காவல் துறையினர் மோப்ப நாய் லூசி உதவியுடன் கோட்டை கொத்தளப் பகுதியில் வெடிகுண்டு சோதனையை நடத்தினர். அதேபால், வேலூர் நேதாஜி விளையாட்டரங்கில் நடைபெற உள்ள சுதந்திர தின விழா நிகழ்ச்சி நடைபெறும் பகுதியையும் காவல் துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வரவுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x