Published : 15 Aug 2021 03:27 AM
Last Updated : 15 Aug 2021 03:27 AM

தமிழக வேளாண் நிதி நிலை அறிக்கையில் - நெல் மற்றும் கரும்பு விலையை உயர்த்தி அறிவிப்பு : தென் இந்திய கரும்பு விவசாயிகள் சங்கம் வரவேற்பு

தமிழக வேளாண் நிதி நிலை அறிக்கையில் நெல் மற்றும் கரும்புக்கான தொகையை உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பு என்பது பயிர் சாகுபடி பரப்பளவை அதிகரிக்க செய்யும் என தென் இந்திய கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் கே.வி.ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முன் எப்பொழுதும் இல்லாத வகையில் முதன் முதலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, உழவர்கள் நலன் கருதியும் மற்றும் கிராமப் பொருளாதாரம் உயர்வடைய வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அறிவித்தது.

அதன்படி, வேளாண் நிதி நிலை அறிக்கையை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று தாக்கல் செய்துள்ளார். மேலும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண்மை சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளுக்கு அர்ப் பணித்துள்ளது பாராட்டத்தக்கது.

வேளாண் நிதி நிலை அறிக்கையில் பல்வேறு மக்கள் பயன்பெறும் வகையில் முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி, இயற்கை ஆர்வலர் நம்மாழ்வார் மற்றும் நெல் ஜெயராமன் ஆகியோரது பெயர்களில் சிறப்பான திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இயற்கை விவசாயத்தை மேம்படுத்தவும், உழவர்களை பாதுகாக்கின்ற வகையில் நெல் சாதாரண ரகம் குவிண்டாலுக்கு ரூ.2,015-ம், சன்ன ரகத்துக்கு ரூ.2,060-ம் என கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட் டுள்ளது. ஒரு டன் கரும்புக்கு ரூ.2,900-ம் என அறிவித்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், நெல் மற்றும் கரும்பு பயிர் சாகுபடி பரப்பு அதிகரிக்கும்.

நிலுவைத் தொகைகள் விவசாயிகள் பெற நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. உழவர் நலன் காக்க வேளாண் மண்டல குழுக்கள், சென்னையில் வேளாண் அருங்காட்சியகம், இயற்கை வேளாண் தனிப்பிரிவு போன்ற நல்ல திட்டங்கள் வரவேற்பை பெற்றிருக்கிறது. இளைஞர்களை ஊக்கப்படுத்தவும் ஈடுபடுத்தவும், உழவர் சந்தைகளை மேம்பாடு செய்யவும், புதிய சந்தைகளை உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது வரவேற்கத் தக்கது.

கிராம மக்கள் வாழ்வாதாரம் மேம்படுத்த 2021-22 ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் வேளாண் மற்றும் உழவர் நலன்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு தென் இந்திய கரும்பு விவசாயிகள் சங்கம் தமிழ்நாடு சார்பில் நன்றியையும், மகிழ்ச்சியையும் மற்றும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்’’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x