Published : 06 Aug 2021 03:20 AM
Last Updated : 06 Aug 2021 03:20 AM

உதகை ராஜ்பவனில் நடைபெற்ற - பழங்குடியினர் கலைநிகழ்ச்சிகளை ரசித்த குடியரசு தலைவர் :

உதகை ராஜ்பவனில் நடைபெற்ற பழங்குடியினர் கலை நிகழ்ச்சிகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கண்டுகளித்தார்.

நீலகிரி மாவட்டம் உதகைக்கு, 3 நாட்கள் பயணமாக கடந்த 3-ம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வந்தார். உதகை ராஜ்பவனில் தங்கியுள்ள அவர், தேயிலை விவசாயிகள், இயற்கை வேளாண் விவசாயிகள் மற்றும் பழங்குடியினரை நேற்று சந்தித்து கலந்துரையாடினார். தோடர், கோத்தர், படுகரின மக்கள் தங்களது பாரம்பரிய பொருட்களை நினைவு பரிசுகளாக, குடியரசுத் தலைவருக்கு வழங்கினர். இதைத்தொடர்ந்து, மாலையில் பழங்குடியினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

குடியரசுத் தலைவரின் செயலாளர் ஆனந்தராவ் விஷ்ணு பாட்டில் வரவேற்றார்.

தோடர், காட்டுநாயக்கர், கோத்தர் மற்றும் படுகரின மக்கள், தங்களது பாரம்பரிய பாடல்கள் மற்றும் நடனங்களை அரங்கேற்றினர்.

அதனை, குடியரசுத் தலைவர் கண்டுகளித்து, அவர்களை பாராட்டினார். அனைவரும் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

குடியரசுத் தலைவரின் மனைவி சவீதா, மகள் சுவாதி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து, 3 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு, உதகையில் இருந்து இன்று காலை 10.30 மணியளவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லி செல்கிறார். உதகை தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்திலிருந்து, ஹெலிகாப்டர் மூலம் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்துக்கு சென்று, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x