Published : 04 Aug 2021 03:23 AM
Last Updated : 04 Aug 2021 03:23 AM
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தேசூரில் உள்ள ஒழுங்குமுறை விற் பனை கூடத்தில் 3 மாதங்களாக நெல் கொள்முதல் தொகை வழங்கவில்லை எனக் கூறி கடந்த மாதம் 15-ம் தேதி பூட்டு போடும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், சேத்துப்பட்டு நெல் வியாபாரி சீனிவாசன் என்பவர் 05-05-2021-ம் தேதி முதல் 25-06-2021-ம்தேதி வரை 159 விவசாயிகளிடம் இருந்து 5,081 நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து ரூ.53 லட்சத்து 71 ஆயிரத்து 142-ஐ வழங்காமல் மோசடி செய்தது தெரியவந்தது.
இது குறித்து தி.மலை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட நெல் வியாபாரி சீனிவாசனை கைது செய்தனர். மேலும், மோசடிக்கு துணையாக செயல்பட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் ராகேஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, விவசாயிகளுக்கு பணத்தை பெற்று தரும் பணியில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. அதன் பயனாக, ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் வங்கி கணக்கில் நெல் கொள்முதல் தொகை ரூ.53 லட்சத்து 71 ஆயிரத்து 142-ஐ சீனிவாசன் செலுத்தியுள்ளார்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட 159 விவசாயி களின் வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதற்கான பணியில் மாவட்ட வேளாண் விற்பனைக் குழு அதிகாரிகள் நேற்று ஈடுபட்டனர். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் கொள்முதல் செய்ய வியாபாரி சீனிவாசனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT