Published : 03 Aug 2021 03:16 AM
Last Updated : 03 Aug 2021 03:16 AM

ஐரோப்பிய நாடுகளில் தமிழ்க்கல்வி, ஆராய்ச்சிகளில் இணைந்து செயல்பட - நார்டிக் அறிவியல் தொழில்நுட்பக்கழகம்- தமிழ்ப் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் :

தஞ்சாவூர்

தமிழ்க்கல்வி, ஆராய்ச்சிகளில் தஞ்சை தமிழ்ப் பல்கலைகழகமும், நார்டிக் அறிவியல், தொழில்நுட்பக்கழகமும் இணைந்து பணியாற்றும் விதமாக நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

ஐரோப்பிய நாடுகளில் தமிழ் கற்பித்தல், ஆராய்ச்சிப் பணி மற்றும் மாணவர் பரிமாற்ற நிகழ்வுகளில் இணைந்து செயல்பட, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் சுவீடன் நாட்டைச் சேர்ந்த நார்டிக் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம், பன்னாட்டுத் தமிழர்ப் பேரவை ஆகிய நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளன. அந்த ஒப்பந்தத்தில், ஆராய்ச்சி தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுதல், கூட்டு ஆராய்ச்சி நிகழ்வு, பன்னாட்டு நிதிநல்கையில் ஆய்வு மேற்கொள்ளுதல், குறுகியகாலப் பயிற்சிகளை நடத்துதல், பண்பாட்டுப் பயிற்சிகளை நடத்துதல் ஆகியவற்றை இணைந்து நடத்துவது என உறுதி செய்யப்பட்டது.

தமிழ்ப் பல்கலை கழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியன், நார்டிக் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் சார்பாக சுவீடனின் சால்மர்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் கல்வியாளர் விஜய் அசோகன், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர்(பொறுப்பு) முனைவர் மோ.கோ.கோவைமணி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறைப் பேராசிரியர் இரா.குறிஞ்சிவேந்தன் உடனிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x