Published : 01 Aug 2021 06:31 AM
Last Updated : 01 Aug 2021 06:31 AM
தருமபுரி-சேலம் நெடுஞ்சாலை அவ்வை வழி பிரிவு சாலையில் ரவுண்டானா அமைக்கக் கோரும் பகுதியை தருமபுரி எம்எல்ஏ பொறியாளர்களுடன் நேரில் ஆய்வு செய்தார்.
தருமபுரி-சேலம் நெடுஞ்சாலையில் ஒட்டப்பட்டி அருகே அவ்வை வழி பிரிவு சாலை உள்ளது. போக்குவரத்து நிறைந்த பகுதியான இங்கு அடிக்கடி விபத்துகள் நிகழுவதால் ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரனிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் குலோத்துங்கன் உள்ளிட்டோரை அப்பகுதிக்கு நேரில் அழைத்துச் சென்று ஆய்வு நடத்தினார். ஆய்வின்போது, அவ்வழியே பயணிக்கும் மக்களின் நலன் கருதி அப்பகுதியில் ரவுண்டானா அமைத்து விபத்துகளை தடுக்க வேண்டுமென அதிகாரிகளிடம் எம்எல்ஏ கோரிக்கை வைத்தார்.
அதேபோல, தருமபுரி அரசு கலைக் கல்லூரி முன்பாகவும், ஏமக்குட்டியூர் செல்லும் சாலை பகுதியிலும் நடந்து வரும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி, சாலை விரிவாக்கப் பணி ஆகியவற்றையும் எம்எல்ஏ ஆய்வு செய்தார். மேலும், அப்பகுதியில் கழிவுநீர் தேங்காத வகையில் கால்வாய்களை அகலப்படுத்தும் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
ஆய்வின்போது, பாமக இளைஞர் சங்க மாநில செயலாளர் முருகசாமி, தொழிற்சங்க பொதுச் செயலாளர் சின்னசாமி, மாவட்ட துணைத் தலைவர் சுப்பிரமணியம், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் சோனியா உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT