Published : 01 Aug 2021 06:32 AM
Last Updated : 01 Aug 2021 06:32 AM

மகாதானபுரம் மகாலட்சுமி அம்மன் கோயிலில் - ஆடி 19 அன்று தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி ரத்து : ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

மகாதானபுரம் மகாலட்சுமி அம்மன் கோயிலில் ஆடி 19 அன்று நடைபெறும் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சியை ரத்து செய்வது என ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராய புரம் அருகேயுள்ள மேட்டுமகாதா னபுரம் மகாலட்சுமி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 19-ம் தேதியன்று பக்தர்கள்ளின் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் பங்கேற்க பெங்களூரு உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.

இதற்காக ஆடி 1-ம் தேதி முதல் பக்தர்கள் விரதம் இருப்பார்கள். இந்நிலையில், இந்த நிகழ்ச்சி தொடர்பான ஆலோசனைக் கூட் டம் கிருஷ்ணராயபுரம் வட்டாட்சி யர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. வட்டாட்சியர் மகுடேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கரோனா பரவல் காரணமாக நிகழாண்டு தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சியை ரத்து செய்வது, ஆடி 18, 19-ம் தேதிகளில்(ஆக.3, 4) கோயிலில் பூஜை செய்ய மட்டும் அனுமதி வழங்குவது, பக்தர்களை கோயிலில் அனுமதிப்பது இல்லை என முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில், மண்டல துணை வட்டாட்சியர் மதியழகன், கோயில் செயல் அலுவலர் சந்திரசேகர், லாலாபேட்டை இன்ஸ்பெக்டர் சுகந்தி, மகாதானபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் பிரேமலதா, துணைத் தலைவர் கஸ்தூரி, ஊர் காரியக்காரர் குணசேகரன், காரிய கமிட்டியைச் சேர்ந்த காந்தன், நாகமுத்து, சவுந்தரராஜன், கோயில் பூசாரி பெரியசாமி, கோயில் நிர்வாகி திராவிடமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கரோனா பரவல் காரணமாக தொடர்ந்து 2-வது ஆண்டாக தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x