

தி.மலை அடுத்த வள்ளிவாகைகிராமத்தில் வசிப்பவர் தமிழ்குமார் (23), வழுத்தளங்குணம் கிராமம் பெருமாள் கோயில் தெருவில் வசிப்பவர் ஏழுமலை மனைவி பாரதி(55). இவர்கள், இருவரும் சாராயம் விற்பனை செய்து வந்தனர்.
இது குறித்து தி.மலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து 2 பேரையும் கிளைச் சிறையில் அடைத்தனர். இவர்களது செயலை தடுக்கும் வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் பரிந்துரையின் பேரில் ஓராண்டு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டார்.
இதையடுத்து, தமிழ்குமார் மற்றும் பாரதி ஆகியோரை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து காவல்துறையினர் வேலூர் மத்திய சிறையில் நேற்று முன்தினம் அடைத்தனர்.