Published : 29 Jul 2021 03:15 AM
Last Updated : 29 Jul 2021 03:15 AM

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி - திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் :

கடம்பூர் சிதம்பராபுரத்தில் அதிமுகவினர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி/ தூத்துக்குடி/ தென்காசி/ நாகர்கோவில்/ கோவில்பட்டி

திருநெல்வேலி மாவட்டத்தில் அதிமுகவினர் தங்கள் வீடுகள்முன் பதாகை ஏந்தி, திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி மாவட்ட அதிமுக செயலாளர் கணேசராஜா தச்சநல்லூரில் உள்ள அவரது வீட்டுமுன் நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அதிமுக அமைப்புச்செயலாளர் சுதா பரமசிவன், அவைத்தலைவர் பரணிசங்கரலிங்கம் ஆகியோர் வண்ணார்பேட்டையிலுள்ள அவர்களது அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் எம்எல்ஏ நாராயணன் தலைமையில் புதிய பேருந்து நிலையத்திலுள்ள அவரது அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி

சங்கரன்கோவிலில் முன்னாள்அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமிதனது வீடு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதில் அதிமுகநிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். செங்கோட்டையில் கடையநல்லூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கிருஷ்ணமுரளி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ செல்வமோகன்தாஸ் பாண்டியன் தனது வீட்டு முன்பு கட்சி நிர்வாகிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி தொகுதி எம்எல்ஏதளவாய் சுந்தரம் தோவாளையில்உள்ள தனது வீட்டு முன்பு போராட்டம் நடத்தினார். குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.ஏ.அசோகன் நாகர்கோவில் சாந்தான்செட்டிவிளையில் உள்ள வீட்டில் போராட்டம் நடத்தினார். முன்னாள் அமைச்சர் பச்சைமால் தம்மத்துகோணத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார்.

வைகுண்டம் பண்டாரவிளையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் திருபாற்கடல், ஒன்றிய செயலாளர் காசிராஜன், நகர செயலாளர் வேதமாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தூத்துக்குடிடூவிபுரத்தில் அதிமுக அமைப்புசெயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார். மாசிலாமணிபுரத்தில் அதிமுக அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

எட்டயபுரத்தில் அதிமுக மாணவரணி இணை செயலாளர் ராஜ்குமார்தலைமையிலும், விளாத்திகுளத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன் தலைமையிலும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினகரனை மக்கள் நிராகரித்துவிட்டனர்: கடம்பூர் ராஜூ

கயத்தாறு அருகே கடம்பூர் சிதம்பராபுரத்தில் உள்ள எம்எல்ஏ கடம்பூர் செ.ராஜூ வீட்டின் முன்புஅவரது தலைமையில், அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், கடம்பூர் ராஜூ எம்எல்ஏ கூறியதாவது: தேர்தலின் போது திமுக மக்களிடம் மாயத்தோற்றத்தை உருவாக்கி, நடைமுறைக்கு சாத்தியப்படாத, நிறைவேற்ற முடியாதவாக்குறுதிகளை வழங்கி, ஒரு மாயை வெற்றியைப் பெற்று ஆட்சி அமைத்துள்ளது. தேர்தல் அறிக்கையில் திமுக கூறிய எந்த அம்சமும், ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை. `ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு இருக்காது’ என்றநிறைவேற்ற முடியாத, சாத்தியப்படாத வாக்குறுதிகளை வழங்கினர். அளித்த வாக்குறுதியை நடைமுறைப்படுத்த முடியாமல் மாணவர்களை இன்று அலைக்கழிக்கின்றனர். டி.டி.வி.தினகரன் ஒரு கட்சியின் பொதுச் செயலாளர். அவரே தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை. மக்களவை, சட்டப்பேரவை ஆகிய 2 பொதுத்தேர்தல்களிலும் மக்கள் அவர்களைப் புறக்கணித்துவிட்டனர். அதிமுகவைப் பற்றி பேசுவதற்கு அவர்களுக்கு தார்மீக உரிமை யில்லை.என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x