Published : 29 Jul 2021 03:15 AM
Last Updated : 29 Jul 2021 03:15 AM

கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் ஆய்வு :

கோவில்பட்டி

``கோவில்பட்டி புதிய கூடுதல் பேருந்து நிலையம் விரைவில் பயன்பாட்டுக்குகொண்டு வரப்படும்” என, ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

கோவில்பட்டி புறவழிச்சாலையில் உள்ள புதிய கூடுதல் பேருந்துநிலையம் 54 பேருந்துகள் நிறுத்தும்வசதியுடன் உள்ளது. இதனை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், நெடுந்தூர பேருந்துகளை இங்கிருந்து இயக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரியிருந்தனர். பேருந்து நிலையத்தில் நேற்று ஆய்வு நடத்திய பின், ஆட்சியர் கூறியதாவது:

பேருந்து நிலையத்துக்குள் உள்ள சாலையை புதுப்பிக்க வேண்டும். சுகாதார வளாகங்களை சீரமைக்க வேண்டும். நடைமேடையின் கடைசி பகுதியில் நிழற்கூடம் அமைக்க வேண்டும். இருசக்கர வாகன காப்பகத்தை நவீன முறையில், நகராட்சிக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில் உருவாக்க வேண்டும் என, நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிய கூடுதல் பேருந்து நிலையத்துக்கும், பழைய பேருந்து நிலையத்துக்கும் இடையே சர்க்குலர் பேருந்துகள்இயக்கப்படும். மதுரை, சிவகாசி,ராஜபாளையம், திருநெல்வேலி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் புதிய கூடுதல் பேருந்து நிலையம் வந்து, பழையபேருந்து நிலையம் செல்லும் வகையிலும், நெடுந்தூர பேருந்துகள் புதியபேருந்து நிலையத்துக்கு மட்டும் வந்துசெல்லும் வகையிலும் திட்டமிட்டுள்ளோம். இது தொடர்பாக அதிகாரிகள், பேருந்து உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. புதிய கூடுதல் பேருந்து நிலையம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும், என்றார் அவர்.

கோட்டாட்சியர் சங்கரநாராயணன், வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன், வட்டாட்சியர் அமுதா, நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

உள் விளையாட்டு அரங்கம்

குறுக்குசாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் ரூ.10 கோடி மதிப்பீட்டில் உள் விளையாட்டு அரங்கம் அமைப்பது தொடர்பாக பள்ளி மைதானத்தையும், எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் 125 மீட்டர் நீளத்துக்கு ரூ.13 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் கட்டுமானப் பணிகளையும் ஆட்சியர் பார்வையிட்டார். பின்னர், கோவில்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஹாக்கி மைதானம் அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x