

நீலகிரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் விடிய விடிய கனமழை பெய்தது. அவலாஞ்சியில் 116 மி.மீ. மழை பதிவானது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதத்தை விட இந்த மாதம் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக அவலாஞ்சி, நடுவட்டம், கூடலூர், பந்தலூர் பகுதிகளில் அதிக மழை பதிவானது.
இந்நிலையில், நேற்று உதகை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது.
பலத்த காற்றுடன் இடைவிடாமல் மழை பெய்து வருவதால், மாவட்டத்தில் கடும் குளிர் நிலவி வருகிறது. குளிரால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
தொடர் மழை காரணமாக விளைநிலங்களை ஒட்டி உள்ள கால்வாய்களில் நீர்வரத்து அதிகரித்தது. சாலையோரம் உள்ள மண் எப்போதும் ஈரப்பதமாக இருக்கிறது. இதனால் ஆங்காங்கே மண்சரிவு, மரங்கள் விழும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இதற்கிடையில் புதுமந்து சாலையோரத்தில் கற்களால் கட்டிய தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. இதனால் வீடுகள் அந்தரத்தில் தொங்குகின்றன. அங்கு வசிப்பவர்கள் பீதியடைந்து உள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேலும் சில இடங்களில் தடுப்புச்சுவர் இடிந்து விழும் அபாயம் உள்ளது. இது தவிர சாலையோரம் மற்றும் மழைநீர் கால்வாய்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க அடைப்புகளை அகற்றி சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.
உதகை அருகே ஆர்.சி.காலனி, வி.சி.காலனி, குளிச்சோலை சாலை மற்றும் உதகை - கூடலூர் சாலையில் மரங்கள் விழுந்தன.
மரங்களை தீயணைப்புத் துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் வெட்டி அகற்றினர்.
பந்தலூர் தாலுகாவில் பெய்த மழையால் கொளப்பள்ளி அருகே உள்ள குறிஞ்சி நகர் பகுதியில் மின் கம்பிகள் மீது மரம் சாய்ந்தது. இதனால் 3 மின் கம்பங்கள் சேதம் அடைந்தன. அவை வீடுகள் மற்றும் சாலை மீது விழுந்தன. இதனால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, வீடுகளில் மின்தடை ஏற்பட்டது.
மின்வாரிய ஊழியர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி அதிகபட்சமாக அவலாஞ்சியில் 116 மி.மீ. மழை பதிவானது. பந்தலூரில் 70, கூடலூரில் 59, நடுவட்டத்தில் 57, கிளன்மார்கனில் 42, குந்தாவில் 42, அப்பர்பவானியில் 40, தேவாலாவில் 39, எமரால்டில் 37, செருமுள்ளியில் 27, பாடாந்தொரையில் 25, சேரங்கோட்டில் 27, உதகையில் 23 மி.மீ., மழைப் பதிவானது.