Published : 23 Jul 2021 07:15 AM
Last Updated : 23 Jul 2021 07:15 AM

வந்தவாசி காவல் நிலையத்தில் தமுமுகவினர் தர்ணா :

வந்தவாசியில் காவல் துறையினரை கண்டித்து காவல் நிலையம் முன்பு தமுமுகவினர் நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தமுமுகவினர் இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகின்றனர். இதனால், அவர்களுக்கு இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட மோதல் காரணமாக, ஒரு பிரிவைச் சேர்ந்த 2 பேரை வந்தவாசி தெற்கு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதையடுத்து, மற்றொரு பிரிவிவைச் சேர்ந்த ஒருவரிடம் விசாரணை நடத்துவதற்காக, அவரது வீட்டுக்கு காவல்துறையினர் நேற்று அதிகாலையில் சென்றுள்ளனர்.

இதையறிந்த தமுமுக மாவட்டச் செயலாளர் ஜமால், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலர் நசீர்அகமது உள்ளிட்டோர் வந்தவாசி தெற்கு காவல் நிலையத்துக்கு நேற்று சென்று, அதிகாலையில் விசாரணைக்கு சென்றது குறித்து ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். இதனால் அவர்களுக்கும், காவல்துறை ஆய்வாளர் குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து காவல்துறை யினர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறி, காவல்துறையினரை கண்டித்து காவல் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினருக்கு எதிராக முழக்கமிட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல் துணை கண்காணிப்பாளர் விஸ்வேஸ்வரய்யா, அவர்களிடம் பேச்சு வார்த்தை சமரசம் செய்ததன் எதிரொலியாக, தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x