Published : 23 Jul 2021 07:15 AM
Last Updated : 23 Jul 2021 07:15 AM

வேலூர் விமான நிலைய - விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை : மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவு

வேலூர் விமான நிலையம் அருகில் உள்ள மயானத்துக்கு மாற்று நிலம் தேர்வு செய்வது உள்ளிட்ட நிலுவையில் இருக்கும் பணிகளை விரைந்து முடிக்குமாறு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விமான நிலையம் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, உதவி ஆட்சியர் (பயிற்சி) ஐஸ்வர்யா, வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணு பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நடைபெற்ற ஆய்வுகள் குறித்து அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘விமான நிலைய பணிகளுக்கான தடைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில், விமான நிலையம் வழியாக பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய் அகற்றுவது குறித்தும் விமான நிலையத்தையொட்டி அமைந்துள்ள மயானத்துக்கு மாற்று இடம் தேர்வு செய்ய வேண்டியுள்ளது. இதை விரைந்து முடிக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

மேலும், விமான நிலையம் அருகில் உள்ள மின் கம்பங்கள், மரங்கள் அகற்றுவது குறித்து விசாரிக்கப்பட்டது. மேலும், விமான நிலைய எல்லையில் இருந்து உயரமான கட்டிடங்கள் கட்ட அனுமதி அளிக்கக்கூடாது என்பது குறித்தும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

மேலும், நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்கவும் ஆட்சியர் உத்தரவிட்டார்’’ என தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x