Published : 01 Jul 2021 03:16 AM
Last Updated : 01 Jul 2021 03:16 AM
முதுகுளத்தூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை எனக் கூறி, திமுக, அதிமுக மற்றும் அமமுகவைச் சேர்ந்த 4 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் ஆர்.தர்மர் தலைமை வகித்தார். ஒன்றிய துணைத் தலைவர் கண்ணகி முன்னிலை வகித்தார். ஒன்றிய ஆணையாளர் ராஜேந்திரன் வரவேற்றார்.
கூட்டத்தில், கவுன்சிலர் அர்ச்சுனன் பேசும்போது, பல கிராமங்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் வரவில்லை என்றார். அதற்கு பதிலளித்த பி.டி.ஓ. செல்லம்மாள், பராமரிப்பு பணிகள் முடிந்ததும் குடிநீர் வழங் கப்படும் என்றார்.
திமுக உறுப்பினர்கள் சண்முகப்பிரியா, நாகஜோதி ஆகியோர், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஸ்டாலின், கருணாநிதி படங்கள் வைக்க வேண்டும் என்றனர். ஆணையர் ராஜேந்திரன் கூறும்போது, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கடந்த ஓராண்டுக்கும் மேலாக கிராமங்களில் திட்டப்பணிகளை மேற்கொள்ள போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என புகார் தெரிவித்து திமுக கவுன்சிலர்கள் லெட்சுமி, ராஜலெட்சுமி, அதிமுக கவுன்சிலர் செல்வி, அமமுக கவுன்சிலர் முருகன் ஆகிய 4 பேரும் கூட்டத்தைவிட்டு வெளிநடப்பு செய்தனர்.
அப்போது பேசிய ஒன்றிய தலைவர் ஆர்.தர்மர், "கரோனா காலம் என்பதால் நிதி ஒதுக்கீடு குறைந்துள்ளது. அரசு நிதி ஒதுக்கிய பின்னர் அனைத்து பகுதிகளுக்கும் நிதி வழங்கப்படும்" என்று கூறினார்.
அதிமுகவைச் சேர்ந்தவர் ஒன்றியத் தலைவராக இருக்கும் நிலையில் அக்கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர், திமுக கவுன்சிலர் களுடன் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT