Published : 10 May 2021 06:25 AM
Last Updated : 10 May 2021 06:25 AM

கரோனா ஊரடங்கு எதிரொலி - தி.மலை மாவட்ட வணிக வீதிகளில் மக்கள் கூட்டம் : அத்தியாவசிய பொருட்களை வாங்கி சென்றனர்

கரோனா ஊரடங்கு எதிரொலியாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வணிக வீதிகளில் 2-வது நாளாக மக்கள் கூட்டம் நேற்று அலைமோதியது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு தீவிரமடைந்து வரும் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கை தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்துள்ளார். அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் முழு ஊரடங்கு இன்று (10-ம் தேதி) அதிகாலை 4 மணிக்கு தொடங்கியது.

முழு ஊரடங்கு காரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வணிக வீதிகளில் மக்கள் கூட்டம் 2-வது நாளாக நேற்றும் அலைமோதியது. திருவண்ணாமலை, வந்தவாசி, செய்யாறு, போளூர், ஆரணி, செங்கம், கீழ்பென்னாத்தூர், வேட்டவலம், தண்டராம்பட்டு, ஜமுனாமரத்தூர், கலசப்பாக்கம் உள்ளிட்ட நகரங்களில் உள்ள மளிகை கடைகள், காய்கறி அங்காடிகள், இறைச்சி கடைகளில் மக்கள் அதிகளவில் திரண்டனர். குடும்பத்துக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் சென்றனர்.

இதற்கிடையில், அத்தியா வசியப் பொருட்களை வாங்க சென்ற மக்களை போல், மதுபானக் கடைகளிலும் மதுப்பிரியர்கள் திரண்டனர். அவர்களை வரிசைபடுத்தி அனுப்ப தடுப்புகள் அமைக்கப்பட்டன. காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், மதுபான பாட்டில்களை வாங்க போட்டிப்போட்டுக் கொண்டு மதுப்பிரியர்கள் முண்டியடித்து சென்றனர். அவர்களை கட்டுப் படுத்த முடியாமல் காவல் துறை யினர் திணறினர். 2 வாரங்களுக்கு மதுக்கடைகள் மூடப்படும் என்பதால், 15 நாட்களுக்கு தேவை யான அளவுக்கு மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.

கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மதுபாட்டில்களை வாங்க திரண்ட மக்களால், தொற்று பரவலை மேலும் அதிகரிக்க செய்துள்ளது என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் கூறும்போது, “2 வார ஊரடங்கை முழுமையாக மக்கள் கடைபிடிக்க வேண்டும். தேவைக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். மளிகை கடைகள், காய்கறி அங்காடிகள், இறைச்சி கடைகள், வேளாண் சார்ந்த கடைகள் போன்றவை பகல் 12 மணி வரை திறந்திருக்கும் என்பதால், கூட்டமாக செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும். முகக்கவசம் அணிந்து, தனி மனித இடைவெளியை பின்பற்றி கரோனா தொற்று பரவலை தடுக்க ஒத்துழைக்க வேண்டும்” என்றனர்.

இரண்டு வார ஊரடங்கு எதிரொலியாக, சொந்த ஊர் களுக்கு செல்ல பேருந்து நிலை யங்களில் மக்கள் குவிந்தனர். திருவண்ணாமலை, போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி மற்றும் செங்கம் பேருந்து நிலையங்களில் இருந்து வெளி யூர்களுக்கு சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x