Published : 06 May 2021 03:14 AM
Last Updated : 06 May 2021 03:14 AM

தொடர்ந்து 3-வது முறையாக - மேற்கு வங்க முதல்வராக மம்தா பதவியேற்பு :

மேற்கு வங்க முதல்வராக திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத்தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 213 தொகுதிகளில் வெற்றி பெற்று தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. பாஜக 77 இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த 3-ம் தேதி ஆளுநர் ஜெகதீப் தன்கரை மம்தா சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

இதைத் தொடர்ந்து கொல்கத்தா வில் உள்ள ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவியேற்பு விழா நேற்று நடந்தது. கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக மிக குறைந்த அளவிலேயே அழைப் பாளர்கள் வந்திருந்தனர். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி பங்கேற்றார்.

முதல்வராக பதவியேற்ற மம்தா பானர்ஜிக்கு ஆளுநர் ஜெகதீப் தன்கர் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

தொடர்ந்து 3-வது முறையாக மேற்கு வங்க முதல்வராக அவர் பதவியேற்றுள்ளார். அவருடன் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. இன்னும் சில தினங்களில் அமைச்சரவை விரிவாக்கம் இருக்கும் என தெரிகிறது.

இதனிடையே புதிய எம்எல்ஏக்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக தற்காலிக சபாநாயகராக பீமன் பானர்ஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் புதிய எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். அதன் பின்னர் முறைப்படி சபாநாயகர் தேர்வு செய்யப்படுவார்.

தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார். அவர் தற்போது எம்எல்ஏ பதவியில் இல்லாததால் அடுத்த 6 மாதத்துக்குள் அவர் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட வேண்டும். எனவே திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களில் யாராவது ஒருவர் பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பதவியேற்புக்கு பிறகு மம்தா கூறியதாவது:

கரோனா தொற்றை கட்டுப்படுத்துவது எங்களின் தலையாய கடமை. அனைத்து அரசியல் கட்சிகள் தங்களைச் சுற்றி நடக் கும் விஷயங்களைக் கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும்.

இதன்மூலம் மாநிலத்தில் நடைபெறும் கலவரங்கள் கட்டுக்குள் வந்து விடும். இன்று முதல் சட்டம்-ஒழுங்கை நான் கையில் எடுத்துக் கொள்கிறேன். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர தகுந்த இடங்களில் போலீஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப் படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

முதல்வராக பதவியேற்றுள்ள மம்தா பானர்ஜிக்கு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x