Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

வீட்டுமனை மாதத்தவணை திட்டத்தில் - மோசடி செய்தவர் குறித்த தகவல் தெரிவிக்க காவல்துறை அழைப்பு :

வீட்டுமனை மாதத்தவணைத் திட்டத்தில் மோசடி செய்து தலைமறைவாக உள்ளவர் குறித்து தகவல் அளிக்கலாம், என நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் தெரிவித் துள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராசிபுரம் கச்சேரித் தெருவில் மகாலட்சுமி ரியல் எஸ்டேட் என்ற பெயரில் வீட்டுமனை மாதத் தவணைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்த திட்டத்தை திருச்செங்கோட்டைச் சேர்ந்த டி.வி. ராமலிங்கம் என்பவருடன் இணைந்து ராசிபுரத்தைச் சேர்ந்த கே.அருள்மணி (60) என்பவர் கடந்த 2004-ம் ஆண்டு முதல் நடத்தி வந்தார். இதற்காக பொது மக்களிடம் இருந்து பணம் முதலீடாக பெற்று மோசடியில் ஈடுபட்டார்.

இவர் மீது கோவை பொருளாதார குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு கோவை டான்பிட் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் அவர் ஆஜராகாமல் கடந்த 2012-ம் ஆண்டுமுதல் தலைமறைவாக உள்ளார். எனவே, கே.அருள்மணி எங்குள்ளார் என்ற விவரமோ அல்லது அவர் தனது உறவினர்கள், நண்பர்களை பார்க்க வந்தாலோ உடனடியாக தகவல் அளிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x