Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM
எம்சிஏ, எம்பிஏ மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான விண்ணப்பப்பதிவு தாமதமாகத் தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக், எம்.பிளான், எம்.ஆர்க் ஆகிய முதுநிலைப் படிப்புகளுக்கான ‘டான்செட்’ நுழைவுத் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஏப்ரல்மாதம் வெளியிட்டது. இதையடுத்து, எம்சிஏ, எம்பிஏ உள்ளிட்ட படிப்புகளுக்கான சேர்க்கை கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க மாணவர்கள் ஆர்வமாக இருந்தனர். ஆனால் இதுகுறித்து அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இதுதொடர்பாக உயர்கல்வித் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
‘டான்செட்’ தேர்வு முடிவு வெளியானதும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பாக எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளுக்கான சேர்க்கை கலந்தாய்வுக்கு மாணவர்களிடம் இருந்துவிண்ணப்பம் பெறத் திட்டமிடப்பட்டிருந்தது. கரோனா பாதிப்பு காரணமாக இளநிலை இறுதி செமஸ்டர் தேர்வுகள் இன்னும் நடத்தப்படவில்லை.
கடந்த ஆண்டு இளநிலை இறுதிசெமஸ்டர் தேர்வு முடிவு வெளியாவதற்கு முன்பாகவே கலந்தாய்வு தொடங்கப்பட்டது. இதனால், ஏராளமான மாணவர்கள் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
அதேபோல, இந்த ஆண்டும் மாணவர்கள் பாதிப்படையக் கூடாது என்பதற்காகவே கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு தாமதமாகத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் புதிய உயர் கல்வித் துறை அமைச்சர் பதவி ஏற்றதும், அவருடன் ஆலோசனை நடத்திய பின்னரே, பொறியியல் கலந்தாய்வு, முதுநிலை படிப்புக்கான கலந்தாய்வு குறித்த முடிவு அறிவிக்கப்படும்.
மேலும், இளநிலை இறுதி செமஸ்டர் தேர்வு முடியும் வரை கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க வழிவகை செய்யப்படும்.
அதேபோல, எம்.ஆர்க், எம்.பிளான்,எம்.இ, எம்.டெக் ஆகிய படிப்புகளுக்கான கலந்தாய்வையும் சற்றுதாமதமாக நடத்த அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT