Published : 05 May 2021 03:14 AM
Last Updated : 05 May 2021 03:14 AM
தமிழகத்தின் தென்பழனி என்றழைக்கப்படும் கழுகுமலையில் மலையை குடைந்து அமைக்கப்பட்ட குடவரை கோயிலான கழுகாசல மூர்த்தி கோயிலில், முருகன் ஒரு முகத்துடனும், ஆறுதிருக்கரங்களுடனும் ராஜகோலத்தில் காட்சியளிக்கிறார். கோடையில் அக்னி நட்சத்திரத்தின்போது, வெப்பம் அதிகமாவதால் மலையின் வெப்பமும் உயர்ந்து காணப்படும்.
இதனால் ஆண்டுதோறும், கோயில் குமார தெப்பத்தில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து,கருவறையைச் சுற்றி 2 அடி உயரத்துக்கு நிரப்பி சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இதனால் சுவாமி கழுகாசலமூர்த்தி குளிர்ச்சி அடைகிறார் என்பது ஐதீகம்.
இவ்வாண்டு நேற்று அக்னி நட்சத்திரம் தொடங்கியதை முன்னிட்டு, காலையில் குமார தெப்பத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து மூலவர் சன்னதியில் சுமார் 2 அடி உயரம் வரைநிரப்பினர். பின்னர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
கடந்த ஆண்டைப் போலவே இந்தாண்டும் கரோனா தொற்று காரணமாக பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. அக்னி நட்சத்திரம் இருக்கும் 24 நாட்களும் தண்ணீர் நிரப்பி சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT