Published : 04 May 2021 03:14 AM
Last Updated : 04 May 2021 03:14 AM
காரைக்கால்: காரைக்கால் சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவர் ஏ.முத்தையா தலைமையில், சங்க நிர்வாகிகள், ஆட்சியர் அர்ஜூன் சர்மாவை நேற்று சந்தித்து அளித்த மனுவில் தெரிவித்துள்ளது:
காரைக்காலில் தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு உத்தரவு காரணமாக பல்வேறு தொழில்கள் நலிவடைந்து வருகின்றன. வியாபாரம் பாதிக்கப்பட்டு கடை வாடகை, மின் கட்டணம், ஊழியர் ஊதியம், வங்கிக் கடன், கொள்முதல் செய்த பொருட்களுக்கு பணம் செலுத்த முடியாதது உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.
கடைகள் மூடப்பட்டுள்ளதால் மே 14-ம் தேதி ரம்ஜான் பண்டிகையையொட்டி, மக்கள் ஜவுளி, வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காரைக்காலில் அத்தியாவசியக் கடைகள் தவிர, பிற வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பதால், காரைக்கால் மக்கள் அண்டை மாவட்டங்களுக்குச் சென்று பொருட்களை வாங்கி வருகின்றனர். காரைக்காலில் கரோனா பாதிப்பு குறைந்து காணப்படுகிறது.
எனவே, காரைக்கால் மாவட்டத்தில் கட்டுப்பாடுகளுடன் வணிக நிறுவனங்களை திறப்பதற்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT