Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM
தருமபுரி மாவட்ட வாக்கு எண்ணும் மையத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வருவோரை அனுமதிக்க வேண்டாம் என காவல்துறையினருக்கான ஆலோசனைக் கூட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டத்தின் பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய 5 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையம் தருமபுரி அடுத்த செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இன்று(2-ம் தேதி) வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்நிலையில் செட்டிக்கரையில் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளி வளாகத்தில் நேற்று காவல்துறையினருக்கான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் தலைமை வகித்தார். வாக்கு எண்ணிக்கை நாளன்று பணியாற்றும் விதம் குறித்து காவல் கண்காணிப்பாளர் பேசியது:
வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்தில் பணியாற்றும் போலீஸார், வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபட வரும் அலுவலர்களை ஒரு வழியிலும், வேட்பாளர்கள், அவர்களின் முகவர்கள் ஆகியோரை மற்றொரு வழியிலும் வளாகத்துக்குள் அனுமதிக்க வேண்டும்.
உரிய ஆவணங்கள் இல்லாமல் வரும் முகவர்களை வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அனுமதிக்கக் கூடாது. முகவர்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீஸார் ஆகியோர் வாக்கு எண்ணிக்கை மைய அறைகளுக்குள் செல்போன் எடுத்துச் செல்லக் கூடாது. வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் எவ்வித அசம்பாவிதங்களும் நடக்காத வகையில் போலீஸார் பணியாற்ற வேண்டும்.
யாரேனும் அசம்பாவித சம்பவங்களை ஏற்படுத்த முயன்றால் அவர்கள் மீது போலீஸார் உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமலில் இருப்பதால் தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சியினரின் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு அனுமதி தரக் கூடாது.இவ்வாறு பேசினார்.
கூட்டத்தில் காவல்துறையின் பல்வேறு அதிகாரிகள் மற்றும் போலீஸார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT