Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM

டயர் தொழிற்சாலைக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை தனியாருக்கு விற்றது எப்படி? : அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு

சென்னை

டன்லப் டயர் தொழிற்சாலைக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை, தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அம்பத்தூர் மற்றும் அத்திப்பட்டு பகுதிகளில் டயர் தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பதற்காக டன்லப் நிறுவனத்துக்கு 165 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கடந்த 1963-ல் விற்பனை செய்தது.

இந்நிலையில், அந்த நிறுவனம்எதிர்பார்த்தபடி லாபத்தில் இயங்காத சூழலில், தொழிலாளர்களுக்கான இழப்பீட்டை வழங்குவதற்காக 2004-ல் 60 ஏக்கர் நிலத்தை ஷெனாய் நகரைச் சேர்ந்த வி.என்.தேவதாஸ் என்பவருக்கு விற்பனை செய்துள்ளது. அவர் வி.குருசாமி நாயுடு அண்ட் கோ என்ற பெயரில் ரியல் எஸ்டேட் நிறுவனம் தொடங்கி, அதன் பெயருக்கு 60 ஏக்கர் நிலத்தையும் மாற்றம் செய்துள்ளார்.

அந்த இடத்தில் வீட்டுமனை வாங்குவதற்காக ஜே.ரவிக்குமார் என்பவர் நிலத்தின் உண்மைத் தன்மை குறித்து ஆராய்ந்தபோது, அந்த நிலம் டன்லப் தொழிற்சாலையிடமிருந்து வாங்கப்பட்டது என்பது தெரியவந்தது.

இது தொடர்பான வழக்கு நீதிபதி ஆர்.பொங்கியப்பன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, "ஒரு இடத்தை வாங்குபவர், அந்தநிலத்தின் ஆவணங்களை சரிபார்ப்பதில் எந்த தவறும் இல்லை. டன்லப்நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட நிலத்தை மீண்டும் அரசே எடுக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளார். ஆனால் அந்த பரிந்துரையை அலட்சியம் செய்து, தனியாருக்கு விற்பனை செய்ய அரசு அனுமதி வழங்கியிருப்பது கண்டனத்துக்குரியது.

மேலும், அந்த தனியார் நிறுவனம் வீடு கட்டவும், வீட்டு மனைகளை விற்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர். தொழிற்சாலை உபயோகத்துக்காக வழங்கப்பட்ட நிலத்தை, அந்நிறுவனம் மூடப்பட்டால் மீண்டும் அரசிடம்தான் ஒப்படைக்க வேண்டும். அல்லது அந்த நிலத்தின் அசல் உரிமையாளருக்கு திருப்பி அளிக்க வேண்டும். மற்றொரு நிறுவனத்துக்கு மாற்றம் செய்வது என்றால், அரசிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

அதன்படி, டன்லப் நிறுவனத்துக்காக வழங்கப்பட்ட நிலத்தை தனியாருக்கு விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதியளித்து கடந்த 2008-ல் அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணையை தமிழக அரசு மறுஆய்வு செய்ய வேண்டும்.

மேலும், இந்த அரசாணை எந்தசூழலில் பிறப்பிக்கப்பட்டது என்பதுகுறித்து, தமிழக தலைமைச் செயலர் வரும் ஜூன் 30-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும்" என உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x