Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM

சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரிக்கு கூடுதலாக 20 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு : மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை

சிவகங்கை

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் இடப்பற்றாக் குறையால் கட்டிடங்கள் கட்டுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கூடுதலாக 20 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி 2012-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. மருத்துவக் கல்லூரிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் 50 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டிருந்தது. இதில் 20 ஏக்கரில் மானாமதுரை சாலையிலிருந்து மருத்துவக் கல்லூரி வரை இணைப்புச் சாலை அமைக்கப்பட்டது. இதனால் தற்போது மருத்துவக் கல்லூரிக்கு 30 ஏக்கர் மட்டுமே உள்ளது.

அந்த இடத்தில் முதலில் மருத்துவக் கல்லூரி கட்டிடம், கலையரங்கம், பேராசிரியர்கள், செவிலியர்கள் தங்கும் விடுதிகள், மருத்துவமனை வளாகத்தில் வெளிநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, பிணவறை போன்றவை அமைக்கப்பட்டன. அதன்பிறகு பிரசவம் மற்றும் குழந்தைகளுக்கான சீமாங் திட்ட கட்டிடம், விபத்து காயப்பிரிவு, மாவட்ட தொடக்க இடையீட்டு சேவை மையம், பார்வையாளர்கள் அறை போன்றவை கட்டப்பட்டன.

மேலும் தற்போது எம்பிபிஎஸ் படிப்பில் 100 மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டுமுதல் எம்பிபிஎஸ் சீட்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப் புள்ளது. இதுதவிர மயக்கவியல், பொது அறுவை சிகிச்சை பிரிவு, மகப்பேறு, பொது மருத்துவம், குழந்தைகள் நலம் ஆகிய 5 முதுநிலை பட் டப் படிப்புகள் தொடங்கப்பட உள்ளன.

ஆனால் தற்போதைய மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கூடுதல் வகுப்பறைகள், முது நிலைப் பிரிவுகள் தொடங்க போதிய இடவசதி இல்லை. இதையடுத்து மருத்துவக் கல்லூரி நிர்வாகம் சார்பில் கூடுதல் இடம் கேட்டு மாவட்ட நிர்வாத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவக் கல்லூரிக்கு கிழக்கு பகுதியில் அம்மா பூங்கா அருகே கூடுதலாக 20 ஏக்கர் நிலத்தை மாவட்ட நிர்வாகம் ஒதுக்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x