Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM

வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்போன் எடுத்துச் செல்ல தடை :

வாக்கு எண்ணும் மையத்திற்குள் தேர்தல் பார்வையாளர்கள் தவிர மற்றவர்கள் செல்போன், லேப்டாப், ஐ பேட் உள்ளிட்டவைகளை கொண்டு செல்ல அனுமதியில்லை என ஆட்சியர் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை(தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி ஆகிய 6 சட்டப் பேரவை தொகுதிகள் உள்ளன. 6 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் கடந்த மாதம் 6-ம் தேதி நடந்தது. தேர்தலில் 86 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 6 லட்சத்து 26 ஆயிரத்து 870 ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து 7 ஆயிரத்து 239 பெண் வாக்காளர்களும், இதரர் 49 பேரும் என மொத்தம் 12 லட்சத்து 34 ஆயிரத்து 158 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். 77.4 சதவீதம் வாக்குகள் பதிவானது. தேர்தலில் பதிவான மின்னணு வாக்குகள் அனைத்தும் கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குகள் இன்று (2-ம் தேதி) எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு தபால் வாக்குகளும், 8.30 மணி முதல் மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன. ஒவ்வொரு தொகுதிக்கும் 15-க்கும் மேற்பட்ட சுற்றுகள் எண்ணப்பட உள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், வாக்கு எண்ணிக்கை தொடர்பான முன்னேற்பாடுகள் மற்றும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்து பேசியதாவது:

கிருஷ்ணகிரியில், வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொள்ளும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள், முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொள்ளும் வேட்பாளர்கள், முகவர்கள் கண்டிப்பாக கரோனா இல்லை என்கிற சான்று அளித்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். 2 தவணை கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களிடம் அதற்கான சான்றிதழ் இருக்க வேண்டும். முகவர்கள், பேனா, பென்சில், வெள்ளைத்தாள் மற்றும் படிவம், 17சி நகலினைக் கொண்டு வரலாம்.

தேர்தல் பார்வையாளர்கள் தவிர மற்றவர்கள் செல்போன், லேப்டாப், ஐ பேட் கொண்டு வர அனுமதியில்லை. மேலும், தீப்பெட்டி, புகையிலைப் பொருட்கள், லைட்டர்கள், குட்கா, பான்மசாலா, ஹான்ஸ், மது வகைகள் மற்றும் குளிர்பானங்கள் போன்றவற்றையும் கொண்டு வரக் கூடாது. கரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக 6 தொகுதிகளுக்கும், 36 தெர்மல் ஸ்கேனர், 1,617 கிருமி நாசினி பாட்டில்கள், 1,601 முகக்கவசங்கள், 11,400 அறுவை சிகிச்சை முகக்கவசம், 9,603 கையுறை, 198 மஞ்சள் கவர், 66 குப்பைக் கூடைகள் ஆகியவை வழங்கப்படுகிறது என்றார்.

இக்கூட்டத்தில், மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர்கள் பல்சானா, அனுராதா, ஹன்ஸ்ராஜ் சுஹான், மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x