Published : 02 May 2021 03:15 AM
Last Updated : 02 May 2021 03:15 AM

கரோனா தாக்கத்தால் வருவாய் இழப்பு - மே தினத்தில் களையிழந்த ஆட்டோ நிறுத்தங்கள் :

தமிழகத்தில் 2 லட்சத்து 85 ஆயிரம் ஆட்டோ ஓட்டுநர்கள், லயனர், பெயின்டர், டாப் அடிப்பவர், பழுது பார்ப்போர் என நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 3.5 லட்சம் பேர் ஆட்டோ தொழிலை நம்பியுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக கரோனா தாக்கம் அதிகரித்து வருவதால், மக்கள் வெளியூர் பயணங்களைத் தவிர்த்து வருகின்றனர். அதேபோல, தியேட்டர்கள், மால்கள், கடற்கரை, பூங்காக்களுக்கு பொதுமக்கள் செல்வதும் முற்றிலும் குறைந்துவிட்டது. இதனால், ஆட்டோக்களுக்கு போதிய அளவில் சவாரி கிடைக்காமல், அவர்களது வருமானம் குறைந்துவிட்டது.

இதற்கிடையே, மே தினமான நேற்று பெரும்பாலான ஆட்டோநிறுத்தங்களில் பெரிய அளவில்நிகழ்ச்சிகளோ, கொண்டாட்டங்களோ இல்லை. ஒரு சில இடங்களில் மட்டும், அவர்கள் சார்ந்துள்ள கட்சிகளின் கொடியை ஏற்றி, இனிப்பு வழங்கினர்.

இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநர்கள் கூறும்போது, "மக்கள் நடமாட்டம் குறைந்துவிட்டதால், ஆட்டோ, கால்டாக்சி ஓட்டுநர்கள் வேறு தொழில்களுக்கு மாறிவருகின்றனர். வழக்கமாக மே தினத்தில் ஆட்டோ நிறுத்தங்களில் சிறப்பான முறையில் விழா நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு பெரிய அளவில் மே தினக் கொண்டாட்டங்கள் நடைபெறவில்லை. கரோனாவால் மக்கள் அவதிப்படும் சூழலில், கொண்டாட்டங்களைத் தவிர்த்துள்ளோம்" என்றனர்.

தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன (சிஐடியு) மூத்த நிர்வாகி ஏ.எல் மனோகரன் கூறும்போது, "தமிழகத்தில் லட்சக்கணக்கான ஓட்டுநர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வாகன கடனுக்கான வட்டியைக்கூட கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர்.

எனவே, மத்திய, மாநில அரசுகள், வாகனங்களுக்கான பர்மிட்டை அடிப்படையைக் கொண்டு, ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்க முன்வர வேண்டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x