செவிலியர் மாணவிகளுக்கு விடுதி இருக்கு, கல்லூரி இல்லை : சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் அவலம்

செவிலியர் மாணவிகளுக்கு விடுதி இருக்கு, கல்லூரி இல்லை :   சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் அவலம்
Updated on
1 min read

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியர் மாணவிகளுக்கு விடுதி இருந்தும் கல்லூரி தொடங்காத நிலை உள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் அரசு செவிலியர் கல்லூரிகள் இல்லை. சிவகங்கை அருகே பூவந்தியில் கிராமப்புற சுகாதார செவிலியர்கள் பயிற்சி மையம் மட்டும் செயல்பட்டு வருகிறது. மேலும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் பற்றாக்குறை ஏற்பட்டால், செவிலியர் கல்லூரி மாணவர்கள் மூலம் வார்டுகளில் நோயாளிகளைக் கவனிக்க முடியும்.

இதனால் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கியபோதே பிஎஸ்சி (அ) டிப்ளமோ நர்சிங் கல்லூரி தொடங்க வேண்டுமெனக் கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து மருத்துவக் கல்லூரி கட்டிடங்கள் கட்டும்போதே செவிலியர் மாணவிகள் தங்கும் வகையில் விடுதிகளும் கட்டப்பட்டன.

ஆனால் மருத்துவக் கல்லூரி தொடங்கி 9 ஆண்டுகளாகியும் இதுவரை செவிலியர் கல்லூரி இதுவரை தொடங்கப்படவில்லை.

தற்போது பாரா மெடிக்கல் படிப்புகளில் லேப் டெக்னீசியன் படிப்பு மட்டுமே சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ளது.

இதுகுறித்து மருத்துவர்கள் சிலர் கூறியதாவது: சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 300-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் உள்ளனர். இருந்தபோதிலும், நோயாளிகளைக் கவனிப்பதில் சிரமம் உள்ளது.

நர்சிங் கல்லூரி இருந்தால் பயிற்சி மாணவர்கள் உதவியாக இருப்பர். மேலும் இதுபோன்ற தொற்று காலங்களில் கூடுதல் உதவியாக இருந்திருக்கும். அதேபோல் 17 வகையான பாரா மெடிக்கல் படிப்புகள் உள்ளன. இதில் ஒன்று மட்டுமே இங்கு உள்ளது என்றனர்.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘செவிலியர் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in