Published : 27 Apr 2021 06:30 AM
Last Updated : 27 Apr 2021 06:30 AM

தொழிலாளி வீட்டில் திருடப்பட்ட நகை மீட்பு : பாப்பாரப்பட்டி போலீஸாருக்கு பாராட்டு :

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த தொட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளி ரவி. இவரது மனைவி நாகராணி. இவரும் கூலித் தொழிலாளி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

குழந்தைகளின் எதிர்காலத் தேவையை திட்டமிட்டு இவர்கள் தங்கள் வருமானத்தின் மூலம் அவ்வப்போது நகை வாங்கி சேமித்து வந்தனர். வீட்டில் 14 பவுன் நகை இருந்தது. இந்நிலையில், கடந்த 22-ம் தேதி வீட்டில் இருந்த நகைகள் மாயமானது. அதிர்ச்சி அடைந்த நாகராணி பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த சின்னசாமி மகன் சிவா (26) என்பவர் நகையை திருடியது தெரிய வந்தது. சிவா, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பழைய பேப்பர்கள் வாங்கும் கடையில் வேலை பார்க்கிறார். அவ்வப்போது ஊருக்கு வந்து செல்வார். அவ்வாறு வந்தபோது நாக ராணியின் வீட்டில் நகை திருட்டில் ஈடுபட்டுள்ளார்.

அவரை கைது செய்த போலீஸார் அவரிடம் இருந்து 14 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். நகை திருட்டில் ஈடுபட்ட குற்றவாளியை விரைந்து கைது செய்து, நகையையும் மீட்ட போலீஸாருக்கு சமூக ஊடகங்களில் பாராட்டு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x