விருதுநகர் அருகே குள்ளூர்சந்தை கிராமத்தில் - குடியிருப்புகளை சூழ்ந்துள்ள கழிவுநீர் : நோய் தொற்று பரவும் அபாயம்

விருதுநகர் அருகே குள்ளூர்சந்தை கிராமத்தில் -  குடியிருப்புகளை சூழ்ந்துள்ள கழிவுநீர் :  நோய் தொற்று பரவும் அபாயம்
Updated on
1 min read

விருதுநகர் அருகே குள்ளூர்சந்தை கிராமத்தில் குடியிருப்புகளை கழிவுநீர் சூழ்ந்துள்ளதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் அருகே உள்ள குள்ளூர்சந்தை, அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது. இக்கிராமத்தில் ஆதி திராவிடர் தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் கழிவுநீர் செல்ல வாய்க்கால் வசதியில்லை. இதனால் கழிவுநீர் முழுவதும் தெருக்களில் ஓடி குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ளன.

இதுகுறித்து இப்பகுதி பொதுமக்கள் அருப்புக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலரிடம், ஊராட்சி நிர்வாகத்திலும் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில், குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ள கழிவுநீரால் மேலும் பல தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தெருக்களில் கழிவுநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள், சிறுவர்கள் கழிவுநீரை மிதித்தே செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும், இரவு நேரத்தில் அதிக அளவில் கொசுத் தொல்லை உள்ளதாகவும் இப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.

ஊராட்சி நிர்வாகமும், வட்டார வளர்ச்சி அலுவலகமும் உரிய நடவடிக்கை எடுத்து குள்ளூர்சந்தை ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் கட்டிக்கொடுத்து நோய் தொற்றிலிருந்து காக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in