Published : 26 Apr 2021 03:18 AM
Last Updated : 26 Apr 2021 03:18 AM
வேம்பாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டியதில் முறைகேடு நடந்துள்ளதா என்பது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், வேம்பாரைச் சேர்ந்த ஏசுவடியான், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
எங்கள் கிராமம் வழியாகச் செல்லும் வேம்பாறு, ஐந்தாம்புளியிலிருந்து 2 கி.மீ. தொலைவில் கடலில் கலக்கிறது. வேம்பாறு தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கும் வகையில் தடுப்பணை கட்டப்படுகிறது.
இந்த தடுப்பணைக்கு தரமற்ற கட்டுமானப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் முறைகேடு நடந்துள்ளது. எனவே, தரமான கட்டுமானப் பொருட்களை பயன்படுத்தி தடுப்பணை கட்ட உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ராஜாராம் வாதிட்டார்.
அரசு தரப்பில் தடுப்பணை கட்டுமானம் முடிந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
பொதுப்பணித் துறை செயற்பொறியாளர், உதவிப் பொறியாளர் ஆகியோர் தடுப்பணை கட்டுமானப் பணிகள் முறையாக நடந்துள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். இதில் முறைகேடு கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது 6 வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT